“மஹிந்த சிந்தனை”: ஆதரித்தாலே ஆதரவு – விசேட தீர்மானம்

“மஹிந்த சிந்தனை”: ஆதரித்தாலே ஆதரவு – விசேட தீர்மானம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் நியமிக்கப்படும் அல்லது ஆதரிக்கப்படும் வேட்பாளர் மஹிந்த சிந்தனையுடன் உடன்படும் மற்றும் அந்த கொள்கைகளை பின்பற்றும் ஒருவராக இருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அகில இலங்கை குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முனனாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை (24.06.24)இந்த சந்திப்பு இடம்பெற்றது.

பெரமுனவின் வேட்பாளர் நாட்டைப் பிளவுப்படுத்தும் மனப்பான்மையுடன் இருக்கக் கூடாது என்றும் இதன்போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்தையே பெரும்பாலானோர் முன்வைத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

அரயலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகைமைகள் இன்றி ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் முன்னிறுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ச அனுமதிக்க மாட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜுன் மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது சிறந்ததாக அமையும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போதுவரை வேட்பாளர் குறித்த எதுவித தீர்மானங்களையும் அந்த கட்சி அறிவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This