முன்னைய அரசாங்கங்களில் இடம்பெற்ற குற்றங்களுக்கான வழக்கு விசாரணைகள் ஆரம்பம்; அச்சத்தில் ஆட்சியாளர்கள்

முன்னைய அரசாங்கங்களில் இடம்பெற்ற குற்றங்களுக்கான வழக்கு விசாரணைகள் ஆரம்பம்; அச்சத்தில் ஆட்சியாளர்கள்

இலங்கையில் கடந்த அரசாங்கங்களின் கீழ் இடம்பெற்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மக்கள் ஆணை வழங்கியமையினால் அனைத்து குற்ற வழக்குகளும் மிக முக்கியமானவை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவீ செனவிரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதான சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

தொக்கி நிற்கும் குற்ற வழக்குகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவீ செனவிரத்ன இதனைத் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கங்களின் கீழ் இடை நிறுத்தி வைக்கப்பட்ட பிரசித்தமான கொலைகள், கடத்தல்கள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் மீள விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக ரவீ செனவிரத்ன தெரிவித்தார்.

அவர்களுக்கு இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள மேலதிக அதிகாரிகள் தேவையெனில், அவ்வாறான அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்ய தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையான ஒரு தீர்மானத்தை எதிர்ப்பார்த்து பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருப்பதால் எந்தவொரு உயர்மட்ட அதிகாரியின் ஈடுபாடுமின்றி அந்த அனைத்து அதிகாரிகளுக்கும் தத்தமது கடமைகளை மேற்கொள்ளக்கூடிய சூழலை தற்போது உருவாக்கியுள்ளதாகவும் அவா் கூறினார்.

அமைச்சர் விஜித் ஹேரத் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதோடு விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறுகின்றதா என்பதையும் அவதானித்து வருவதாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவீ செனவிரத்ன வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
Share This