பொதுத் தேர்தலின் பின்னர் பல கட்சிகள் அநுரவுக்கு ஆதரவு; கொள்கை பிரச்சினையால் கூட்டணி அமைக்கவில்லை

பொதுத் தேர்தலின் பின்னர் பல கட்சிகள் அநுரவுக்கு ஆதரவு; கொள்கை பிரச்சினையால் கூட்டணி அமைக்கவில்லை

பொதுத் தேர்தலில் போட்டியிடும் பல கட்சிகள் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.

கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிகளில் போட்டியிட்ட பல கட்சிகள் தேசிய மக்கள் சக்தியின் கூட்டணியின் கீழ் போட்டியிட பேச்சுகள் நடத்திய போதிலும் அதற்கு சாதகமான பதில்கள் கிடைத்திருக்கவில்லை.

”சில கட்சிகள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களை சந்தித்து எமது கூட்டணியில் போட்டியிடுவதற்கான கோரிக்கையை முன்வைத்த போதிலும் கொள்கை ரீதியான பிரச்சினை காரணமாக அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அரசியல் ரீதியாக மோசடிகளில் ஈடுபடாத ஒரு குழுவினர், நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட வேண்டுமென நாட்டு மக்கள் எண்ணுகின்றனர். அதனால் எந்தவொரு கட்சியையும் தமது கூட்டணியில் இணைத்துக்கொள்ளவில்லை என்றும் டில்வின் சில்வா கூறியிருந்தார்.

என்றாலும், குறித்த கட்சிகள் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

பொது மக்களுக்கு சாதகமான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாகவும் குறித்த கட்சிகள் உறுதியளித்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகளை காட்டிலும் பொதுத் தேர்தலில் மேலும் வாக்குகள் அதிகரிக்கும் என பிவிதுரு ஹெல உறுமிய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This