அரசாங்கத்தால் வரிச்சுமையை குறைக்க முடியாமல் போயுள்ளது: சஜித் குற்றச்சாட்டு

அரசாங்கத்தால் வரிச்சுமையை குறைக்க முடியாமல் போயுள்ளது: சஜித் குற்றச்சாட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் புதிய அரசாங்கம் கலந்துரையாடிய போதும், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நேரடி மற்றும் மறைமுக வரிகளை குறைக்க அரசாங்கத்தினால் முடியாதுபோயுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அவிசாவளை தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ விதிக்கப்பட்ட வரிகள் அவ்வாறே அறவிடப்படுகின்றன. தற்போதைய அரசும் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டை அவ்வாறே தொடர்கிறது.

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் மறந்துவிட்டது. ஜனாதிபதியும் அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய கலந்துரையாடல் என்ன ? என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறோம்.

நேரடி மற்றும் மறைமுக வரிகளை குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதையும் அறிய விரும்புகிறோம். தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வரிகளை குறைப்பதாக கூறுகின்ற போதிலும் அதனை நிறைவேற்றப்போவதில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வரிச்சுமையை குறைப்போம். தற்போதுள்ள நிலையில் வாழ்க்கைச் செலவு சுமைக்கு ஈடுகொடுக்க முடியாது. இந்த அழுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால்,

இந்த அழுத்தத்தின் அசௌகரியத்தை குறைக்கும் வேலைத்திட்டத்திற்கு செல்லுமாறு நான் எதிர்க்கட்சியில் இருந்த போதே சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்மொழிந்தேன்.

IMF பிரதிநிதிகள் தான் கூறியதைக் கேட்டு, தங்களுக்கு மக்கள் ஆணை இருந்தால், அந்த முன்மொழிவுகளை செயல்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் மக்களை ஒடுக்கும் வரிச்சுமையை நீக்கி நிவாரணம் வழங்குவோம்” என அவர் உறுதியளித்தார்.

CATEGORIES
Share This