காந்தி; பொபி சான்ட்ஷ் : திலீபன் சுதந்திர விடியலுக்கான அகிம்சை வேள்வி!

காந்தி; பொபி சான்ட்ஷ் : திலீபன் சுதந்திர விடியலுக்கான அகிம்சை வேள்வி!

  • நவீனன்

திலீபன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு இருந்த போது, அன்றைய இந்தியத் தூதுவர் தீக்சித் இடம் திலிபனின் உண்ணாவிரதம் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.அதற்குப் பதிலளித்த தீக்சித், திலீபன் என்ன மகாத்மா காந்தியா? என்று இறுமாப்புடன் தெரிவித்திருந்தார்.

காந்தியை விட திலீபன் மேலானவன் – வை.கோ:

இந்தியத் தூதுவர் தீக்சித்தின் இந்தக் கூற்று பற்றி பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த வை.கோபால்சாமி அவர்கள், திலீபன் மகாத்மா காந்தியைவிட சிறந்தவன் என்று அடித்துக் கூறியிருந்தார்.

திரு வைக்கோ, தனது இந்த வாதத்திற்காக மகாத்மா காந்தியின் சுயசரிதையான சத்திய சோதனையில் இருந்து ஒரு சம்பவத்தையும் எடுத்துக் காண்பித்திருந்தார். மகாத்மா காந்தியின் இளமைப்பருவத்தின்போது அவரது தந்தை காலமாகிவிட்டார்.
தந்தையின் பூதவுடல் அஞ்சலிக்காக வீட்டின் கூடத்தில் கிடத்தி இருக்கையில், தனது இளமையின் பாலியல் உணர்ச்சிகளை காந்தியால் கட்டுப்படுத்தமுடியாமல் மறைவில் சென்று அதனை தீர்த்துக்கொண்டதாக சத்திய சோதனையில் காந்தி தெரிவித்திருந்தார்.

இளவயதின் உணர்ச்சிகளை மகாத்மாவினாலேயே அடக்கமுடியாது இருந்துள்ளது. ஒரு சோகமான நேரத்தில்கூட மகாத்மாவினால் தனது பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்தமுடியாமல் அதற்கு வடிகால் தேடிச் சென்றுள்ளார்.

ஆனால் திலீபனோ தனது இள வயதில், அந்த வயதிற்கான அனைத்து உணர்ச்சிகளையும் உதறித்தள்ளிவிட்டு, தனது கொள்கைக்காக தன்னுயிரை தியாகம் செய்ய முன்வந்திருந்தான். இதனாலேயே மகாத்மா காந்தியை விட திலீபன் மேலானவன் என வை.கோபால்சாமி தெரிவித்திருந்தார்.

அகிம்சை ஒரு நெடிய போராட்டம். போராடிக் கொண்டே இருக்கலாம். முடிவு போராட்டத்தின் கையில் இல்லை. எதிராளியின் வலிமையை பொறுத்தே உள்ளது.

காந்தியால் இந்திய நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி சொல்லி இருப்பதை பலரும் விமர்சித்துள்ளனர். ஆயினும் அகிம்சையின் உச்சம் தொட்ட திலீபனின் தியாகத்தை உலகம் என்றும்உணரும்.

மகாத்மா காந்தி குறித்து ஆளுநர் சொல்லியிருப்பது வன்மம் கலந்த நோக்கமே என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், முதல்வர் இதனை கடுமையாக சாடியுள்ளார்.

கடந்த வருடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி பங்கேற்று பேசினார். அப்போது, மகாத்மா காந்தி குறித்து ஆளுநர் பேசிய கருத்துக்கள் விமர்சனத்திற்குள்ளானது.

எனினும் காந்தியின் அகிம்சை அவர் பற்றியும், காந்தி பெற்றுத் தந்த இந்திய சுதந்திரம் பற்றியும் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. ஏன், மகாத்மா காந்தியை விட திலீபனின் தியாகத்தால் சிறந்தவன் என இந்திய அரசியல் தலைவர்களே கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆயினும் காந்தி தேசத்தின் தமிழின விரோத நிலைப்பாட்டின் அழியா
சாட்சியாக விளங்குவதே தியாக தீபம் திலீபனின் உயிர்க் கொடையாகும். திலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற உளுத்துப் போன தத்துவத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே உள்ளது.

ஐரிஷ் எழுச்சிக்கு அகிம்சை குரல்:

சுதந்திர விடியலுக்கான அகிம்சை வேள்வியின் இன்னோர் அடையாளமே பொபி சான்ட்ஷ். ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரை அரசியல் கைதிகளாக அங்கீகரிக்கக்கோரி இவர்கள் தமது உண்ணாநோன்பு இருந்தவர். இவர் உண்ணாநோன்பிருந்த காலத்தில் சிறையில் இருந்தவாறே ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1981 சிறைச்சாலையில் பிரித்தானிய அரசுக்கெதிராக உண்ணா நோன்பிருந்த கைதிகளுக்குத் தலைமை வகித்தவர் பொபி சான்ட்ஸ்(Robert Gerard Sands, ‘பொபி சான்ட்ஸ்’ (Bobby Sands, மார்ச் 9, 1954 – மே 5, 1981). அந்த இளம் போராளி யாருமல்ல. அவரே பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய பொபி சான்ட்ஸ்.

வட அயர்லாந்தில் லிஸ்பேர்ன் நகரில் உள்ள சிறையில் உண்ணா நோன்பிருந்து இறந்த அந்த இளம் போராளிக்கு அப்போது வயது 27.
அந்த இளம் போராளியுடன் சேர்ந்து பத்து பேர் இந்த உண்ணா நோன்பில் இணைந்து இறந்தனர். இவரின் இறப்பு ஐ.ஆர்.ஏ அமைப்புக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. இதன் பின் பலர் இந்த அமைப்பில் இணைந்து கொண்டனர்.

பொபி சான்ட்சுக்கு ஆதரவாக சர்வதேச ரீதியில் ஆதரவாக பலத்த குரலெழுப்பப்பட்டன. இப் போராட்டம் 66 நாட்களில் முடிவுக்கு வந்தது, ஆம் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம்திகதி சுயநினைவற்ற நிலையிலேயே அப்போராளியின் உயிர் பிரிந்தது.
உண்ணாவிரத போரில் பொபி சான்ட்ஸ்:

பிரிட்டன் வட அயர்லாந்து என்ற பகுதியை காலனிப் படுத்தி வைத்திருப்பதையும், IRA யின் போராட்டம் பிரிட்டிஷ் அரசுக்கு சவாலாக வளர்ந்து விட்டதையும் வட அயர்லாந்து பிரச்சினையில், அப்போதய பிரதமர் மார்க்கரெட் தாட்சர் ஆக்கிரமிப்பாளர்களான ஆங்கிலேய குடியேறிகளை ஆதரித்தார். விடுதலைக்காக போராடிய ஐரிஷ் மக்களை அடக்குவதில் குறியாக இருந்தார்.

விடுதலைக்காக போராடும் ஐரிஷ் சிறுபான்மை இனத்தை ஒடுக்கும், பிரிட்டிஷ் கொடுங்கோன்மையை உலகம் அறியச் செய்த போராட்டம் அது. இந்த உண்ணாவிரத போராட்டம் நாளுக்கு நாள் நாடு தழுவிய எழுச்சியை ஏற்படுத்தியது. உலக நாடுகள் மத்தியில் பேச்சு பொருளானது, இந்த நேரத்தில் 1981இல் ஐக்கிய இராச்சியத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நிலையிலேயே ஐரீஸ் குடியரசு இயக்கம் (Irish Republican Movement ) சார்பில் நின்று தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினரானார்.

உண்ணாவிரதமிருந்து மரணத்தை தழுவிக் கொண்ட பொபி சாண்ட்சின் மரண ஊர்வலத்தில், பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த செய்தி சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து, உலகம் முழுவதும் பேசப் பட்டது. அது தாட்சர் அரசுக்கு, சர்வதேச மட்டத்தில் தலைக்குனிவை ஏற்படுத்தியது.

அதே போன்று பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிரான பொபிசான்ட்ஸின் போராட்டம், தேசிய இனங்களை அடிமைப்படுத்தி அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்த ஏகாதிபத்தியங்கள் அம்மக்களின் அகிம்சா வழி போராட்டங்களை எப்போதுமே கண்டு கொள்ளாது என்பது தான் உலக விதியும் வரலாறாகவும் பதிவு செய்யப்பட்டது.

ஒப்பிலா அறவழிப் போராளி திலீபன்:

நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன் என தன்னுடலுக்கு துரோகமும் தன்னினத்திற்கு தன்னையும் தந்த ஒப்பிலா அறவழிப் போராளி திலீபனின் இறுதி வார்த்தைகளே இவையாகும்.

தமிழீழம் என்பது சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்த ஒரு சமதர்ம சோசலிச தமிழீழமாகத் தான் மலரும் என்ற விடுதலைக் கனலை விழியிலேந்திய பார்த்திபன் இராசையா என்னும் இயற்பெயர்கொண்டவர் திலீபன்.

காந்தியின் அகிம்சை வழியில் தன் விடுதலையை பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தை கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான்.

உண்மையில் அகிம்சை மூலமாக இந்தியா விடுதலைப் பெற்றது என்பதே இந்திய விடுதலையை ஒட்டி எழுப்பபட்ட மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் தானே தவிர அகிம்சை மட்டுமே இந்தியாவின் விடுதலைக்கு காரணமாக அமைந்து விட வில்லை. இந்திய விடுதலை அகிம்சையினால் நிகழ்ந்தது என்றால் அதனைவிட ஆயுதமேந்தி போராடிய இந்திய வீரர்களை மறந்துவிட முடியாது.

தமிழ் நாடு ஆளுநரின் கருத்துக்கு கண்டனங்கள் எழுந்தாலும், காந்தியின் அகிம்சையும் திலீபனின் உயிர்க்கொடையையும் ஒரே தட்டில் ஒப்பிட முடியாது. திலீபனுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. திலீபன் காந்தீய வழியில் தன் போராட்டத்தை முயன்றார். ஆனால் காந்தி போல உயிர் வாழ முயலவில்லை. திலீபன் தன் உயிரை ஒரு பொருட்டாக கருதவில்லை. தியாகத்தின் உச்சத்திற்கே திலீபன் சென்றார்.

CATEGORIES
Share This