‘இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதே எனது நோக்கம்’: பிபிசிக்கு தெரிவித்த உமா குமரன்

‘இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதே எனது நோக்கம்’: பிபிசிக்கு தெரிவித்த உமா குமரன்

இலங்கையில் இருந்து போர் காரணமாக புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையிலிருந்து ஒருவர் நாடாளுமன்றிற்கு தெரிவாகி இலங்கை தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஆம். அவர் தான் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட உமா குமரன். இவருக்கு உலக வாழ் தமிழர்கள் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் இவரை பிபிசி தமிழ் நேரடி நேர்காணல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அந்த காணொளியில் இலங்கை தொடர்பாக பல கேள்விகள் எழுப்பட்டது. அதில் பிரதானமாக,

உங்களின் அரசியல் பிரச்சாரங்களின் போது, இலங்கையின் போர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நீதி தொடர்பில் தாங்கள் வெளிப்படையாக பேசியிருந்தீர்கள். இதற்காக உங்களின் பதவி காலத்தில் என்ன செய்யப்போகின்றீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு உமா குமரன்,

“எமது பிரதமர் கியஸ்டாமர் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான கெத்ரின் மிஸ்க் போன்ற அனைவருமே தற்போதைய அரசாங்கம் அமைவதற்கு முன்னராக இருந்து இலங்கை தமிழ் மக்களுக்கான நீதிக்காகவும் பொறுப்புக்காவும் போராடிய வண்ணமே உள்ளனர். மேலும் நல்லிணக்கத்தை பெற்றுக்கொடுப்பதற்காக குரல் கொடுத்தும் வருகின்றனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதில் பிரித்தானியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என நாம் ஆட்சிக்கு வரும் முன்பிருந்தே வலியுறுத்தி வருகின்றோம்.

நடந்த அனைத்துக்கும் பொறுப்பானவர்கள் பதில் கூறியே ஆகவேண்டும். இறுதிகட்ட போரின் போது, தமிழர்கள் இடத்தில் ஏற்பட்ட வலிகளும் துன்பங்களும் மேலும் பதிந்துள்ள நினைவுகளும் ஒருபோதும் எம்மைவிட்டு போய்விடாது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து உமா குமரனிடம், ஆனால், இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது உங்களின் கட்சி அதாவது, லேபர் கட்சி தான் பிரித்தானியாவில் அப்போது ஆட்சியில் இருந்தது. அந்த நேரத்தில் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் அநியாயங்களை தடுப்பதற்கு ஏன் அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனங்களும் இருக்கின்றது அல்லவா? என கேள்வி எழுப்பப்பட்டது.

தொடர்ந்து அதற்கு பதிலளித்த உமா குமரன்,

“இந்த விடயம் அடிக்கடி பேசப்பட்டு இருக்கின்றது. நான் அந்த வேளையில் லேபர் எம்.பி ஒருவரிடம் பணியாற்றினேன். அப்போதைய வெளியுறவு செயலாளராக இருந்த டேவிட் மில்லிபேண்டை நாங்கள் பல தடவைகள் சந்தித்தோம்.

டேவிட் மில்லிபேண்ட், இலங்கையர்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள் தொடர்பில் முழுமையான அக்கறையை யாரும் சொல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. இலங்கையில் அரசாங்கத்தின் செயற்பாட்டை நிறுத்துமாறு சத்தமாகவும் வெளிப்படையாகவும் குரல்கொடுத்தார்.

அவரது குரல் ஓங்கி ஒலித்ததாக இன்றும் 15 ஆண்டுகளுக்கு பிறகு உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் சொல்ல கேட்கின்றோம். ஆனால் காலம் கடந்து பின்நோக்கி பார்த்து ஏதாவது வேறு விதமாக செய்திருக்கலாம் அல்லது இன்னும் உறுதியாக ஏதாவது செய்திருக்கலாம் என யோசித்திருக்கலாம். ஆனால் நாம் இப்போது என்ன செய்ய போகின்றோம் என்பதை மட்டுமே பார்க்கவேண்டும்.

வலிகள் மிக்க 15 ஆண்டுகள் கடந்தும் எமக்கு நீதி கிடைக்கவில்லை. இலங்கை அரசாங்கமும் இதற்கு நீதி கிடைக்க விசாரணை நடத்துவதற்கான எந்தவொரு முதுற்சியையும் இதுவரை எடுக்கவில்லை. அங்கு வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என குறிப்பிட்டார்.

இந்த நேர்காணலை முழுமையாக பார்வையிட கீழ்காணும் இணைப்பை பார்வையிடவும்.

CATEGORIES
Share This