மட்டு. சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் – கல்வெட்டு பதிப்பதை தடுத்து குழப்பம் விளைவித்த பொலிஸார் – இராணுவமும் குவிப்பு

மட்டு. சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் – கல்வெட்டு பதிப்பதை தடுத்து குழப்பம் விளைவித்த பொலிஸார் – இராணுவமும் குவிப்பு

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியை புனர்நிர்மானம் செய்து, அதில் ”இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்கள்” என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இன்று திங்கட்கிழமை (09) பதித்துக்கொண்டிருந்தபோது, இக்கல்வெட்டை பொலிஸார் பலவந்தமாக அகற்றி, அங்கு புனரமைப்பு செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.

அதனையடுத்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதில் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. 

அத்துடன், அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு  சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உட்பட 7 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

1990 செட்டெம்பர் 9ஆம் திகதி  கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் முதலான பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள், 10 வயதுக்குட்பட்ட 42 சிறுவர்கள், 25 வயோதிபர்கள் உட்பட  186 பொதுமக்கள் இராணுவத்தினராலும் ஊர்காவல் படையினராலும் ஒட்டுக்குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டு 34வது நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

இந்த நினைவேந்தலை முன்னிட்டு சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்ட படுகொலை செய்யப்பட்டவர்களின் தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான  முன்னாயத்த வேலைகளை செய்துகொண்டிருந்தனர்.

இதன்போது “1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 186 அப்பாவி பொதுமக்கள்” என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மற்றும்  உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டை நினைவுத்தூபியில் பதித்துக்கொண்டிருந்தனர். 

அவ்வேளை அங்கு சென்ற கொக்குவில் பொலிஸார், “இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினர் ஒட்டுக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட” என குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டை பதிக்க முடியாது என கூறி கல்வெட்டை பதிக்கவிடாமல் தடுத்துள்ளனர்.

 இதன்போது அங்கிருந்த பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

அப்போது பொதுமக்கள், இது 1995 சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது  ஓய்வுபெற்ற நீதியரசர் கே.பாலிகிட்ணன் தலைமையில் ஆணைக்குழு அமைக்கப்பட்டு, அதில் பாதிக்கப்பட்ட மக்களும் அதில் உயிர் தப்பியவர்கள் பலரும் இராணுவத்தினர், ஊர்காவல் படையினர் படுகொலை செய்ததாக சாட்சியமளித்து, அவை ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் யாரால் படுகொலை செய்யப்பட்டது என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை ஏன் பதிக்கக்கூடாது என பொதுமக்கள் கேள்வியெழுப்பி வாதம் செய்தனர். 

இந்நிலையில் தொடர்ந்தும் கல்வெட்டை பதிக்கவிடாது பொலிஸார் தடுக்க முற்பட்டபோது அதனை மீறி கல்வெட்டு பதிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது அங்கு நின்ற  பொலிஸ் அத்தியட்சகர் பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட 7 பேரை அங்கிருந்து இழுத்துச் சென்று ஜீப் வண்டியில் ஏற்றியுள்ளார். 

அத்துடன் கல்வெட்டு பதிக்கும் வேலையை செய்துகொண்டிருந்த மேசனை இழுத்துத் தள்ளி, கல்வெட்டை அகற்றியதில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து ஜீப் வண்டியில் ஏற்றப்பட்ட 7 பேரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, பின்னர் இறக்கிவிடப்பட்டனர். 

அதேவேளை அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

CATEGORIES
Share This