யாழில் மோட்டார் சைக்கிளில் சாகசம் காட்டிய இளைஞர்கள்: 10 பேர் கைது

யாழில் மோட்டார் சைக்கிளில் சாகசம் காட்டிய இளைஞர்கள்: 10 பேர் கைது

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள், மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் செலுத்தியவர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்ணை பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெருமளவாவர்கள் நடை பயிற்சி செய்வதற்கும், குழந்தைகள், சிறுவர்களுடன் கடற்கரையில் பொழுதை கழிக்கவும் என கூடுவார்கள்.

அவ்வாறான நேரங்களில் இளைஞர்கள் குழுக்கள் பெரிய சத்தங்களுடன் மோட்டார் சைக்கிள் ஓடுதல், வீதியில் ஆபத்தை விளைவிக்கும் விதமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்துதல் என மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு சாகசங்கள் செய்து மக்களுக்கு இடையூறு விளைவித்து வந்தனர்.

இந்நிலையில் அது தொடர்பில் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, போக்குவரத்து பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பண்ணை பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதன் போது மோட்டார் சைக்கிளை ஆபத்து விளைவிக்கும் வகையாக செலுத்தியமை, போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களின் 10 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும், அவர்களின் மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார், நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
Share This