நாடாளுமன்றத்தையும் கலைக்க உத்தேசம்; மிகப் பெரிய பிரளயங்கள் உருவாகும்

நாடாளுமன்றத்தையும் கலைக்க உத்தேசம்; மிகப் பெரிய பிரளயங்கள் உருவாகும்

ஜனாதிபதித் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் 50 இற்கும் அதிகமான எம்.பிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது ஜனாதிபதித் தேர்தலுடன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான கோரிக்கையையும் சில எம்.பிகள் முன்வைத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தை கலைப்பதன் ஊடாக எந்தவொரு கட்சியாலும் பெரும்பான்மையை பெற முடியாததொரு சூழ்நிலை ஏற்படலாம்.

அதனால் தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள கூட்டணி அரசாங்கமொன்றை அமைக்கலாம் என குறித்த எம்.பிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

கடந்த காலத்தில் ரணில் விக்ரமவிங்க மற்றும் பசில் ராஜபக்சவுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்புகளின் போதும் நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனையை பசில் முன்வைத்திருந்தார்.

என்றாலும், ஜனாதிபதி அதனை நிராகரித்திருந்தார். ஆனால், தற்போது அரசியல் ரீதியாக நெருக்கடியான சூழ்நிலையொன்று உருவாகியுள்ளதால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான முயற்சிகளை ரணில் விக்ரமசிங்க எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி பல செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் நிபந்தனைகளை ஏற்குமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அக்கட்சி விடுத்திருந்த காலக்கெடு இன்று 25ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. கடந்த வாரம் எதிர்வரும் 26ஆம் திகதி தமது வேட்பாளரை அறிவிப்பதாக பொதுஜன பெரமுன அறிவித்திருந்தது.

மகிந்த ராஜபக்சவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் தீர்மானமிக்க சந்திப்பொன்றும் இவ்வார இறுதியில் இடம்பெற உள்ளது. அந்த சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்பட அதிகளவான வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

ஆனால், இன்றுவரை ரணில் விக்ரமசிங்கவுடன் அக்கட்சிக்கு எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. என்பதால் அக்கட்சியின் தீர்மானம் என்னவாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

என்றாலும், பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான எம்.பிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். இதனை அவர்கள் நேரடியாகவே தெரிவித்து வருகின்றனர்.

இந்த வாரமும் அடுத்த வாரமும் இலங்கை அரசியலில் மிகப் பெரிய பிரளயங்கள் உருவாகும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவால் முடியும் முடியும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

CATEGORIES
Share This