திமுகவின் ஆட்சிக்கு நற்சான்று கிடைக்குமா?: விக்கிரவாண்டியில் இன்று இடைத் தேர்தல்

திமுகவின் ஆட்சிக்கு நற்சான்று கிடைக்குமா?: விக்கிரவாண்டியில் இன்று இடைத் தேர்தல்

தமிழ்நாடு விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இன்று புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைவேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இத்தேர்தலில் 1,16,962 ஆண்கள், 1,20,040 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 42 மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 13ஆம் திகதி நடக்கிறது.

இந்தத் தேர்தல் ஆளும் திமுகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலான பார்க்கப்படுகிறது. திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சி தொடர்பில் மக்களின் மனநிலையை அவதானிக்கும் ஒரு தேர்தலாக இது அமையும் என தமிழக் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கல்லச்சாராயத்தால் ஏற்பட்டுள்ள மரணங்கள் திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கை கேள்விக்கு உள்ளாகியுள்ளது. அதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமழகத்தையே உலுக்கியுள்ளது. இதுவும் திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. என்றாலும் பணப்பட்டுவாடாவால் ஆளுங்கட்சிக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This