சிங்கள தேசம்: யாசகம் கேட்காது – ரணில்

சிங்கள தேசம்: யாசகம் கேட்காது – ரணில்

இலங்கையில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும். அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அச்சமின்றி உண்மையைப் பேசக்கூடிய தலைவர்கள் அரசியல் கட்டமைப்பில் உருவாக வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தேசிய வங்கியாளர்கள் ஒன்றியத்தினால் காலிமுகத்திடல் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட வங்கியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

நாடு எதிர்நோக்கும் பொருளாதாரச் சவாலை அச்சமின்றி மக்களுக்கு எடுத்துக்கூறியதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்குத் தகுந்த வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கு மாறான வேலைத்திட்டங்கள் எவையும் நாட்டுக்கு கிடையாதெனவும், கனவுலகில் இருப்பதை விடுத்து நாட்டுக்குத் தேவையான வேலைத்திட்டத்தை அடையாளம் கண்டு செயற்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை முன்னேற்றிச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதெனவும் வலியுறுத்தினார்.

சிலர் அர்ஜென்டினாவின் மார்ட்டின் குஸ்மானை முன்மாதிரியாகக் கூறினாலும், அவர் தோல்வியடைந்தவர் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிலர் உலகத் தலைவர்களிடம் பணம் கேட்கச் சொல்கிறார்கள். ஆனால் சிங்கள தேசம் ஒருபோதும் யாசகம் கேட்டுச் செல்லாதெனவும், தன்னம்பிக்கையால் முன்னேறக்கூடிய தேசமாகவே திகழ்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஏற்றுமதிப் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும் என தெரிவித்த ஜனாதிபதி, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வேலைத்திட்டத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதில் வங்கிக் கட்டமைப்புக்கு முக்கிய வகிபாகம் உள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

CATEGORIES
Share This