கோட்டாவை ஆட்சியிலிருந்து அகற்றிய போராளிகள் குழு; ரணிலுக்கு எதிராக அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்தது

கோட்டாவை ஆட்சியிலிருந்து அகற்றிய போராளிகள் குழு; ரணிலுக்கு எதிராக அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்தது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.

இலங்கைத் தீவில் இடம்பெற்ற கடுமையான போராட்டங்கள் காரணமாகவே ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டடிருந்தார் கோட்டாபய.

கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்ற காலிமுகத்திடலை மையப்படுத்தி தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த போராட்டங்களை முன்னின்று நடத்திய பல தரப்பினர் ஒன்றிணைந்து புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளனர்.

‘மக்கள் போராட்ட முன்னணி’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டணியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் மக்கள் போராட்டக்கள அமைப்பின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினருமான வசந்த முதலிகே, மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் செயலாளர் லஹிரு வீரசேகர,

மக்கள் பேரவைக்கான அமைப்பின் சட்டத்தரணி நுவான் போபகே, ஊடகவியலாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் தரிந்து உடுவரகெதர உட்பட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கைகோர்த்துள்ளனர்.

அத்துடன், முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி, சோசலிச மக்கள் கூட்டமைப்பும் கூட்டணியில் இணைந்துள்ளன.

இந்த கூட்டணி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான போராட்டங்களை நாடு முழுவதும் திட்டமிட்டுள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல்களையும் நடத்த உள்ளனர்.

ரணிலை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாது தடுக்கும் வகையில் இந்த கூட்டணியின் நகர்வுகள் இருக்கும் என தெரியவருகிறது.

CATEGORIES
Share This