அரச வங்கிகளில் 65 ஆயிரம் கோடி கடன் பெற்ற அமைச்சர்கள்!: மீளச் செலுத்தப்படவில்லை என்கிறது மத்திய வங்கி ஊழியர் சங்கம்

அரச வங்கிகளில் 65 ஆயிரம் கோடி கடன் பெற்ற அமைச்சர்கள்!: மீளச் செலுத்தப்படவில்லை என்கிறது மத்திய வங்கி ஊழியர் சங்கம்

தற்போது அமைச்சர்களாகப் பதவி வகிப்போர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான வர்த்தகர்கள் 10 பேர் இரு அரச வங்கிகளுக்கு 65,000 கோடி ரூபாயை மோசடி செய்து கடன் செலுத்துவதை தவிர்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவக்க வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக சாதாரண பிரஜை ஒருவருக்கு வங்கி ஒன்றின் மூலம் கடன் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது வரிக்கு மேல் வரி செலுத்தி பொது மக்களை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் புதிய வரி வகைகள் இரண்டின் மூலம் அரச வருவாயை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

சம்பவம் உண்மை என உறுதி

பிரபல அமைச்சர்கள் உள்ளிட்ட பிரபல வர்த்தகர்கள் 10 பேர் 65,000 கோடி ரூபாயை இரு வங்கிகளுக்கு மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை வங்கியின் ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்கவிடம் ‘ஒருவன்‘ செய்திப்பிரிவு கேட்டது.

அதன்போது அவர் சம்பவத்தை உண்மை என உறுதிப்படுத்தியுள்ளார்.

இரு அரச வங்கிகளிடம் 65,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதனை மீள செலுத்தாது செயற்படும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான வர்த்தகர்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநேக தடவைகள் கேள்வியெழுப்பியிருந்தாலும் அதற்கு சரியான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் செயலாளர் தெரிவித்தார்.

20 வருட கடன்

அவர்கள் சுமார் 20 வருடங்களாக இவ்வாறு வங்கிகளில் கடன் பெற்று அவற்றை மீள செலுத்தாது வெவ்வேறு வழிமுறைகளில் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்களுக்கு சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரு அரச வங்கிகளிலும் காணப்படுவது நாட்டின் சாதாரண மக்கள் வைப்பிலிட்ட பணம் என்பதால், அவற்றை இவ்வாறு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான வர்த்தகர்களால் கடனாக பெற்றுக்கொண்டு மாசடிகளில் ஈடுபடுவது வங்கிகளால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு நிலை என இலங்கை வங்கியின் ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் தெரிவித்தார்.

இன்று வரையில் இந்தக் கடன் தொகை மீள செலுத்தப்படவில்லை என அவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This