பொது வேட்பாளர் விடயத்தை சுமந்திரன் குழப்புகிறார்

பொது வேட்பாளர் விடயத்தை சுமந்திரன் குழப்புகிறார்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் இடம்பெற்றுவரும் முன்னெடுப்புக்களை சுமந்திரன் குழப்பியடிக்கின்றார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் பொது வேட்பாளர் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வு நடைபெறவுள்ளமை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான இந்தக் கூட்டத்துக்கு எனக்கொரு அழைப்பும் வரவில்லை. ஆனால், இவ்வாறான கருத்துப் பரிமாற்ற கூட்டங்கள் என்பது எங்களைத் திசை திருப்புவதாகவே அமையும்.

சிவில் சமூகத்தினர், தமிழ் மக்கள் சார்பிலே ஒருவரைப் பொது வேட்பாளராக நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். இதனை முன்வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுடனும், பல அரசியல் தரப்பினர்களுடனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறாக பொதுவான நிலைப்பாடு எடுக்கப்பட்டு அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கும்போது இந்த விவகாரத்தைப் பொது வெளியில் கொண்டு சென்று கருத்துப் பரிமாற்றம் என்று சொல்லி முரண்பாட்டுக்குரியதாகக் கொண்டு வந்து நிறுத்துவது திசை திருப்புவதாகவே அமையும்.

எங்களுடைய இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக யாராவது ஏதாவது சொல்ல வேண்டுமாக இருந்தால் எப்பவும் எதனையும் சொல்லட்டும். அதற்குரிய பதில்களை நாங்கள் கூறுவோம்.

அதாவது பொது வேட்பாளரைக் கொண்டு வந்து நிறுத்தினால் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவார்கள் அல்லது அப்படி, இப்படி என்று ஏதாவது காரணங்களைச் சொன்னால் அதற்குரிய பதில்களை வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

எமது தீர்மானம் குறித்து எந்தவிதமான கருத்துப் பரிமாற்றமும் தேவையில்லை. ஏனெனில் நாங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டோம். அது சம்பந்தமாக ஆதரவு அல்லது எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தங்களுடைய கருத்துக்களை எங்களுக்குத் தருகின்றபோது அதற்குப் பதிலைக் கொடுப்பது எங்களுடைய கடமை.

அதனை விடுத்து இந்த விடயத்தைப் பொது வெளியில் அல்லது பொது மன்றத்தில் பேசவும் அதைப் பெரிதாக்கவும் வேறுவிதமாக இதைத் திசை மாற்றிக் கொண்டு செல்ல நினைப்பதும் பிழையான ஒரு வழிமுறை என்பது என்னுடைய கருத்தாகும்.

சுமந்திரன் தமிழ்த் தேசியத்தோடு நின்றவர் அல்ல. இதுவரையில் நமக்குத் தெரிந்த வரையில் தமிழ்த் தேசியத்தோடு ஒன்றியவரும் அல்ல. எனக்குப் பயமில்லை, நான் அதைச் சொல்லுவேன், இதைச் சொல்லுவேன் என்று அவர் சொல்லுவதிலிருந்தே அது தெரியும்.

பொது வேட்பாளர் என்ற விடயத்தில் அவருக்கு ஈடுபாடு இல்லை. அவரைப் பொறுத்தவரையில் ஏதோ தெற்கில் இருக்கும் ஒரு வேட்பாளருக்கு அது யாரோ ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் அல்லது ஆதரவு வழங்க வேண்டும் என்றும், அதிலிருந்து தமக்கு சில நன்மைகள் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணம் இருக்கக்கூடும்.

CATEGORIES
Share This