பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய்கிறோம் ; கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டிலும் டெலோ

பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய்கிறோம் ; கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டிலும் டெலோ

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன் தேசியத்தின்பால் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டிலும் டெலோ ஈடுபடுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் எம். பியுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறா தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எமது பூர்வீகம் ஓடுக்கப்படுகின்ற எங்களது தேசத்திலே அதனை மீட்டெடுக்கின்ற வகையிலும் எங்களது நிலங்களை பாதுகாக்கின்ற வகையிலும் எங்களது மக்களுடைய சுவிட்சமான வாழ்வை பெற்றுக் கொடுக்கின்ற வகையிலே தமிழீழ விடுதலை இயக்கம் தனது கடமையினை செய்து கொண்டிருக்கின்றோம்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கமானது ஒற்றுமையாக தமிழ் கட்சிகளை அணிதிரட்டுகின்ற செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதோடு தேசியத்தினை நேசிக்கின்ற ஏனைய கட்சிகளினை உள்வாங்குவதற்கான பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கின்றோம்.

அந்த வகையிலே எமது மக்களிற்காகவும், மண்ணிற்காக துப்பாக்கி ஏந்திய நாம் எம் மண்ணையும், மக்களையும் காப்பாற்றும் செயற்பாட்டினை தொடர்ந்து செய்வோம்

மேலும் எமது வன்னி மாவட்டத்தை குறிப்பாக வவுனியா மாவட்டத்தின் பூர்வீகத்தை ஒழிக்கின்ற தென்னிலங்கை சக்திகளின் செயற்பாட்டினை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியினை மேற்கொள்வோம்.

நீதிமன்றத்தில் தமிழரசு கட்சி மீது வழக்கு இருப்பதன் காரணமாக கட்சிகளை ஒன்றினைக்கும் எமது செயற்பாடு தொடர்பாக இதுவரை தமிழரசு கட்சியுடன் கலந்துரையாடவில்லை. இவ்வழக்கு தொடர்பான முடிவு வரும் பட்சத்தில் அவர்களுடன் பேசி பொதுச் சின்னத்தில் இணைந்து அதன் ஊடாக அக்கட்சியின் ஊடக எல்லாவிதத்திலும் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம்

ஜனாதிபதி தேர்தலின் முன்னர் பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்படும் என செய்திகள் வருகின்றன. எங்களை பொறுத்த வரை எமது மக்களின் பிரச்சனை ஓங்கி ஒழிக்க வேண்டியதே பிரதானமாகும். அந்த வகையிலே இரண்டு தேர்தல்களையும் சந்திப்பதற்கு தயாராகவே இருக்கிறோம்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் மாவட்டம்தோறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்ற நிலையிலே திருகோணமலையிலே பொலிஸார் அடாவடிதனமாகவும் மூர்க்கத்தனமாகவும் பெண்களை இழுத்து மோசமாக நடாத்துகின்ற செயற்பாட்டிற்கு எமது கன்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு இவ்வாறான அஞ்சலி நிகழ்வுகளிற்கு தடை உத்தரவு போடுகின்ற யாராக இருந்தாலும் எமது மக்கள் மண்ணிக்க மாட்டார்கள்.

அந்தவகையில் எமது மக்களை மோசமாக நடாத்துபவர்கள், எமது நிலங்களை அபகரித்தவர்களிற்கு ஜனாதிபதி தேர்தலின் போது எமது மக்கள் முகம்கொடுக்க மாட்டார்கள். அத்தோடு இவ்வாறான செயற்பாடு காரணமாகவே பொது வேட்பாளர் என்ற விடயம் மேலோங்கி இருக்கின்றது.

மேலும் இது தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

CATEGORIES
Share This