முதல் முறையாக ட்ரோன் மூலம் ரத்தம் அனுப்பிய ஒடிசா எய்ம்ஸ் மருத்துவமனை!

முதல் முறையாக ட்ரோன் மூலம் ரத்தம் அனுப்பிய ஒடிசா எய்ம்ஸ் மருத்துவமனை!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, மருந்து, ரத்தம் ஆகியவற்றை பிற சுகாதார மையங்களுக்கு விரைவாக அனுப்பி வைக்க ஏதுவாக ட்ரோன் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, முதல் ட்ரோன் சேவை மூலம்கோர்தா மாவட்டத்தில் உள்ள டாங்கி சமுதாய சுகாதார மையத்துக்கு ரத்தம் அனுப்பி வைக்கப்பட்டது.

12 கிலோ எடை கொண்ட இந்த ட்ரோன், 2 முதல் 5 கிலோ வரையிலான மருந்துகளை எடுத்துச் சென்று விநியோகிக்கும் திறன் வாய்ந்தது. மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் செல்லும் இதில் ஜிபிஎஸ் தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மருந்து பொருட்களை குறித்த நேரத்தில் விநியோகம் செய்ய முடியும். எய்ம்ஸ் மருத்துவமனைக்காக, ஸ்கை ஏர் மொபிலிட்டி நிறுவனம் ட்ரோன் சேவையை வழங்குகிறது.

இதுகுறித்து எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டிலேயே முதல் முறையாக ட்ரோன் மூலம் ரத்தம் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் 60 கி.மீ. தூரத்தை 35 நிமிடங்களில் கடந்து ரத்தத்தை விநியோகம் செய்தது” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து எய்ம்ஸ் செயல் இயக்குநர் அசுதோஷ் பிஸ்வாஸ் கூறும்போது, “ட்ரோன் மூலம் ரத்தம் விநியோகம் செய்யும் பணிவெற்றி பெற்றுள்ளது. இந்த முயற்சிசுகாதார கட்டமைப்பில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திரும்பி வந்த ட்ரோன், அங்கிருந்து ரத்த மாதிரிகளையும் சேகரித்து வந்தது.

புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது அத்தியாவசியமான மருத்துவ பொருட்களை ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு விநியோகம் செய்வதில் ட்ரோன் சேவை பெரிதும் உதவும்” என்றார்.

CATEGORIES
TAGS
Share This