கொழும்பில் களமிறங்குமா தமிழரசுக் கட்சி?: இந்த வாரம் தீர்மானம்

கொழும்பில் களமிறங்குமா தமிழரசுக் கட்சி?: இந்த வாரம் தீர்மானம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் இந்த வாரம் தீர்மானிக்கப்படவுள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள 11 பேர் அடங்கிய நியமனக் குழு கூடி, அந்தத் தீர்மானத்தை எடுக்கும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், அரசால் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்து போட்டியிட உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இணைந்து போட்டியிடுவதற்கான அழைப்பும் விடுக்கப்பட்ட போதிலும் அக்கட்சிகள் குறித்த அழைப்பை நிராகரித்துள்ளமையால் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது.

CATEGORIES
Share This