மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு !

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு !

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை (21) நடைபெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று (20) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பு இந்து கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தேர்தல் அலுவலகத்தில் இருந்து இன்று காலை முதல் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான ஜே.ஜஸ்ரீனா முரளிதரன் தலைமையில் இந்த வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு இந்து கல்லூரியிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டுகின்றன.

இன்றைய தினம் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 260 வாகனங்கள் போக்குவரத்து சேவைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்தார.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புக்காக சுமார் 1500 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாளை (21) காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை வாக்களிப்பு நடைபெறும் எனவும் பொதுமக்கள் தமது வாக்குகளை உரிய நேரகாலத்துக்கு சென்று செலுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

CATEGORIES
Share This