இரண்டாவது லெபனான் போர் ?…. ஹிஸ்புல்லா தாக்குதலும் இஸ்ரேல் பதிலடியும்!

இரண்டாவது லெபனான் போர் ?…. ஹிஸ்புல்லா தாக்குதலும் இஸ்ரேல் பதிலடியும்!

ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஹிஸ்புல்லா, இஸ்ரேல் உடன் போரில் ஈடுபட நினைத்தால் அது இரண்டாவது லெபனான் போராக இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். தாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் ஹிஸ்புல்லா விரும்பினால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்)

லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, எல்லையில் இஸ்ரேல் ராணுவத்துடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறது.

இஸ்ரேலின் ராணுவ தளங்களை குறிவைத்து, 300க்கும் மேற்பட்ட ராக்கெட், ஏவுகணைகள், டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில், தலைநகர் டெல் அவிவ் அருகே உள்ள இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத்தின் தலைமையகத்தையும் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், லெபனான் மீதான தாக்குதல் தங்கள் தேசத்தை தற்காத்துக் கொள்வதற்கான உரிமை என இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் ராணுவத் தளங்களைக் குறிவைத்து சுமார் 300-க்கும் மேற்பட்ட கணைகளை ஏவி தாக்குதல் மேற்கொண்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு ஆகஸ்ட் 25இல் தெரிவித்தது. இஸ்ரேல் தரப்பிலும் லெபனான் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது.

நாங்கள் கண்டறிந்த தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக தேசத்தையும், மக்களையும் தற்காத்துக் கொள்வதற்கான உரிமை மற்றும் கடமை இஸ்ரேலுக்கு உள்ளது என்றும் லெபனான் மீது தாக்குதல் தொடுத்துள்ளோம் என ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கான காரணம் என்ன?

கடந்த மாதம் ஹிஸ்புல்லா உயர்மட்ட தலைவர் ஃபவத் ஷுக்ர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல் தொடுத்துள்ளதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுவிப்பு போன்ற காரணங்களால் தாக்குதலை தாமதப்படுத்தியதாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்தது. இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் ட்ரோன் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்ததாக தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ஹிஸ்புல்லா மீது தீவிர தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

லெபனான் மீது தாக்குதல்:

ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை தொடுப்பதற்கு முன்பாகவே, லெபனான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லாக்கள் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதை நாங்கள் முன்கூட்டியே கண்டறிந்தோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய மக்கள் மீதான அச்சுறுத்தலை தணிக்கும் விதமாக, இஸ்ரேலிய ராணுவ விமானங்கள் ஹில்புல்லாக்களின் இலக்குகளை நோக்கி நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
தெற்கு லெபனானில், வடக்கு மற்றும் மத்திய இஸ்ரேல் பகுதிகளை இலக்காக கொண்ட ஹிஸ்புல்லாக்களின் நூற்றுக்கணக்கான ராக்கெட் லாஞ்சர்களை எங்கள் விமானங்கள் தாக்கி அழித்தன என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 100 போர் விமானங்கள், தெற்கு லெபனானில் உள்ள ஹில்புல்லாக்களின் ராக்கெட் லாஞ்சர்களை தாக்கி அழித்தன. இவைகளில் பல வடக்கு இஸ்ரேல் மற்றும் மத்திய இஸ்ரேலை குறிவைத்து இருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2வது லெபனான் போர் என இஸ்ரேல் எச்சரிக்கை:

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பதற்றத்துக்கு பதில் அளித்துள்ள அமெரிக்கா, இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பாதக தெரிவித்துள்ளது.
காசா போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையேயான இந்த மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் தற்போதைய இந்தத் தாக்குதல் லெபனானில் முழு அளவிலான தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் ஹிஸ்புல்லா விரும்பினால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒருபுறம் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தெற்கு லெபனானில் சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நடந்து வரும் நிலையில், கடந்த நாட்களில் தெற்கு லெபனானின் பல பகுதிகளில் உட்புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் போல் இல்லாமல் ஹிஸ்புல்லா போராளிகள் கடுமையான எதிர் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஹிஸ்புல்லா – கடவுளின் கட்சி:

ஹிஸ்புல்லா என்றால் அரபு மொழியில் கடவுளின் கட்சி என்று பொருள். 1980களில் கிடைத்த எண்ணெய் வளம், மேற்கத்திய நாடுகளின் பார்வையை மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியத்தை நோக்கி திரும்பியது.

அப்போது ஈராக், சிரியா, ஜோர்டான், லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பு தோன்றியது. சிரியா மற்றும் ஈராக்கில் துணை ராணுவ குழுக்கள் மூலம் பயிற்சி மேற்கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர், ஈரானின் நேச நாட்டு போராளிகள் அமைப்புடன் நெருக்கமாக இருந்தனர்.

லெபனான் அரசியலில் கடந்த 30 வருடங்களாக தலையிட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், கடந்த தேர்தலில் செல்வாக்கு இழந்தனர். இருந்தாலும், தெற்கு லெபனான் பகுதியில் பெரும்பாலான இடங்கள் ஹிஸ்புல்லா அமைப்பினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

ஹமாஸ், ஹவுதி, உள்ளிட்ட அமைப்புகளுடன் ஹிஸ்புல்லா நெருக்கமான தொடர்பில் இருந்து வருகிறது. 2006 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கிய நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது பிரச்னைகள் எல்லையில் நடந்து வருகின்றன.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கிய அக்டோபர் 7ம் தேதி முதல் ஹிஸ்புல்லா அமைப்பினரும், வடக்கு இஸ்ரேல் பகுதியை நோக்கி தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஹமாஸ் உடன் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் போரிட்டு வரும் நிலையில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, வடக்கு இஸ்ரேலில் உள்ள யூத குடியிருப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்படும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேல் வடக்கு பகுதியில் உள்ள ஒரு லட்சம் யூதர்களை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்துள்ளது.

ஹிஸ்புல்லா, இஸ்ரேல் உடன் போரில் ஈடுபட நினைத்தால் அது இரண்டாவது லெபனான் போராக இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெஞ்சமின் நெதன்யாகுவின் கருத்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. போர் தொடங்கிய நாளில் இருந்து இஸ்ரேல் தொடர்ச்சியாக லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், ஐ.நா தலையிட்டு அப்பாவி மக்கள் இறப்பதை தடுக்க வேண்டும் என்றும் லெபனான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This