ஐம்பது இலட்சம் மக்கள் வாழும் பெருநகரமாக மேல்மாகாணத்தை மாற்றியமைப்பதற்கு திட்டம்

ஐம்பது இலட்சம் மக்கள் வாழும் பெருநகரமாக மேல்மாகாணத்தை மாற்றியமைப்பதற்கு திட்டம்

மேல்மாகாணத்தை சுமார் 50 இலட்சம் மக்கள் வாழும் பெரிய நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கிராமங்கள், நகரங்கள் மற்றும் மலையகத்தை உள்ளடக்கிய வகையில் மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி மற்றும் வீட்டு உரிமைகளை வழங்குவதற்கு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக எந்தவொரு அரசாங்கத்தினாலும் நடைமுறைப்படுத்தப்படாத இந்த புரட்சிகரமான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் (17) பிற்பகல் நடைபெற்ற கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 50,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் ‘ரன்தொர உறுமய’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய, 2024 வரவு செலவுத் திட்டத்தில் 20 இலட்சம் பேருக்கு காணி உரிமை வழங்கும் உறுமய வேலைத்திட்டமும், கொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் இரண்டரை இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் முழு உரிமையை வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:

கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அந்த மக்களின் பிரச்சினைகளை நான் நன்கு புரிந்து கொண்டுள்ளேன்.
நாங்கள் மிகவும் இக்கட்டான காலக்கட்டத்தில் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றோம். கடந்த பொருளாதார நெருக்கடியால் இந்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் செயற்படும் என்று நீங்கள் நம்பினீர்கள். அந்த நம்பிக்கையின் காரணமாகவே அந்தப் பணியில் வெற்றி பெறும் வாய்ப்புக் கிடைத்தது.

இன்று நாடு பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறது. இந்த அரசாங்கம் ஒரு கட்சியால் கட்டியெழுப்பப்பட்டது அல்ல. சிலர் பொறுப்புகளை புறக்கணித்த போது, ஒவ்வொரு கட்சியிலிருந்தும் நபர்களை மிகத் திடீரென திரட்டி இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன் இந்த நாட்டில் இப்படியொரு அரசாங்கம் இருக்கவில்லை.

இன்று நாம் ஒரு நாடாகக் கட்டியெழுப்புகின்ற இவ்வேளையில் சாதாரண மக்களுக்கும் இதன் பயன்கள் சென்றடைய வேண்டும். அதனால்தான் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் முழு உரிமையையும் உங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.

எந்த அரசாங்கமும் செய்யாத பணியை இந்த அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. சாதாரண மக்களுக்கு நாம் உரிமையை வழங்கியுள்ளோம். இந்த நாட்டின் உரிமையை விரிவுபடுத்தியுள்ளோம். மற்ற அரசாங்கங்கள் பங்குச் சந்தையில் மட்டுமே உரிமையைப் பார்த்தன. எத்தனை பேர் பங்குகளை வாங்கினார்கள், பங்குகளின் பெறுமதி கூடுகிறதா அல்லது குறைந்ததா என்று பார்த்தார்கள். ஆனால் நாங்கள் சாதாரண மக்களைப் பார்த்தோம்.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கு முன்னாள் தலைவர்கள் மூன்று பேர் பெரும் தியாகம் செய்தனர். பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல பம்பலப்பிட்டியில் முதலாவது அடுக்குமாடி குடியிருப்பை நிர்மாணித்தார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொழும்பில் பாரிய அடுக்குமாடி திட்டங்களை செயற்படுத்தினார்.

மேலும், கோட்டாபய ராஜபக்ஷ அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பணியாற்றினார். அதற்காக இந்த மூவருக்கும் நன்றி கூற வேண்டும். இன்று உங்களுக்கு வழங்கப்படும் வீட்டு உறுதிப் பத்திரங்களின் மதிப்பு பத்து வருடங்களில் இரட்டிப்பாகும். எனவே, இந்தச் சொத்தை முறையாக நிர்வகித்து உங்கள் வாழ்க்கையை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

CATEGORIES
Share This