நாட்டின் நீதிப் புத்தகத்திலுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் – மன்னாரில் சஜித்

நாட்டின் நீதிப் புத்தகத்திலுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் – மன்னாரில் சஜித்

நாட்டின் நீதிப் புத்தகத்தில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன். எமது கடல் வளங்கள் கொள்ளையிடப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கவுள்ளேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வகையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (15) காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மன்னாருக்கு விஜயம் செய்தார்.

இதன்போது சஜித் பிரேமதாச மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அலுவலகத்துக்குச் சென்று அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சஜித் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரின் அபிவிருத்திக்காக மீண்டும் ஒரு முறை மன்னார் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளேன். வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு வழங்குவதே எனது நோக்கமாக உள்ளது.

முக்கியமாக, நாட்டின் நீதிப் புத்தகத்தில் உள்ள 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன்.

மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து, அவர்களுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கவுள்ளேன். எமது கடல் வளங்கள் கொள்ளையிடப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கவுள்ளேன்.

வடக்கு மக்களின் அரசியல் உரிமை, சமூக உரிமை, பொருளாதார உரிமை, மனித உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளேன்.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு தாய் பிள்ளைகள் போல் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, இந்த நாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லவுள்ளேன். இந்த நாடு வங்குரோத்து அடைந்த நிலையில் உள்ளது. அதற்கு நாங்கள் ஒருதாய் பிள்ளைகள் போன்று தீர்வு பெற்றுக்கொள்வது அவசியம்.

மன்னார் மாவட்டமின்றி வடக்கு, கிழக்கில் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் அதிகமாக உள்ளன. அக்குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கான சிறந்த திட்டங்கள், இலங்கை முழுவதும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டங்களை கொண்டுவரவிருக்கிறேன்.

நுண்கடன் திட்டம் ஊடாக பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

மேலும், வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவர்களை மையப்படுத்தி நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்க எண்ணியுள்ளேன்.

மீனவர்களின் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க எண்ணியுள்ளதோடு அதை வடக்கு கிழக்கை மையப்படுத்தி தீர்வு பெற்றுத் தருவேன்.

மாகாண சபை முறைமையை வலுப்படுத்தி அதை நிச்சயமாக பாதுகாக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். அத்தோடு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

மறைந்த எனது தந்தையார் ரணசிங்க பிரேமதாச அவர்கள் மாகாண சபையை இல்லாது ஒழிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அதேபோன்று மாகாண சபை கட்டமைப்பை பாதுகாக்கவும் முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார். 

CATEGORIES
Share This