“மதுரை,காஞ்சிபுரம்,தஞ்சாவூரிற்கு பின்னர் அனுராதபுரம்“: ஜனாதிபதி

“மதுரை,காஞ்சிபுரம்,தஞ்சாவூரிற்கு பின்னர் அனுராதபுரம்“: ஜனாதிபதி

வரலாற்றில் பிரசித்தி பெற்ற வணிக மற்றும் பொருளாதார மையமாக அநுராதபுர நகரத்தை மீண்டும் உலகப் பிரசித்தமான நகரமாக மாறுவதற்குத் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிய வளாகத்தில் LTL வர்த்க குழுமத்தினால் அமைக்கப்பட்ட 150 கிலோவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய சக்தி கட்டமைப்பை கையளிக்கும் நிகழ்வில் நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அனுராதபுரம் புனித நகருக்கு வருகைத் தந்திருந்த மக்களோடும் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி

“சூரிய சக்தி உள்ளிட்ட மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்திகளை இலங்கையின் அறிமுகப்படுத்த முன்வரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு வழங்கும் LTL நிறுவனத்திற்கு நன்றி கூற வேண்டும்.

அதனால் இந்த நிறுவனம் உலக பிரசித்தமான நிறுவனமாக மாறியுள்ளது. ஆனால் அவர்களில் ஆரம்பம் இலங்கையில் நிகழந்தது என்பதை அவர்கள் இன்றும் மறக்கவில்லை.அதனால் ஜய ஸ்ரீ மகா போதிய வளாகத்திலும் இவ்வாறான பணிகளை முன்னெடுக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்காலத்திலும் ஒத்துழைப்புக்களை வழங்குவோம். அநுராதபுர நகரத்திற்கு ஆயிரம் வருடங்கள் பழமையான வரலாறு உள்ளது. அதேபோல் அநுராதபுரம் பழமையான வர்த்தக மற்றும் பொருளாதார மையமாகவும் திகழ்ந்துள்ளது. இத்தகைய பெறுமதியான நகரத்தில் பல்வேறு தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஜே.ஆர். ஜயவர்த்த ஜனாதியின் காலத்தில் யுனெஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடி கலாசார முக்கோண வலயம் ஆரம்பிக்கப்பட்டது. பொலன்னறுவை, சீகிரிய, தம்புள்ளை,கண்டி,அநுராதபுரம் போன்ற நகரங்கள் இதனால் பிரசித்தமடைந்தது. அதன் பின்னர் எந்த புதிய திட்டமும் ஆரம்பிக்கப்படவில்லை. அதனால் நாம் இப்போது இந்த நகரத்தில் தொல்லியல் ஆய்வு பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.

தற்போது காம்போடியாவின் அங்கோர் நகரில் யுனெஸ்கோ அமைப்பு பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் நிதியுதவியுடன் பெரிய அளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 30-40 வருடங்களாக இந்த பணிகள் இடம்பெறுகின்றன.

அது போலவே யுனெஸ்கோவினால் பிரான்ஸ் உதவியுடன் லாவோஸ் – இலுவாங் பிரபாங் நகரத்திலும் அந்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சீன அரசாங்கத்தின் சொந்த நிதியை கொண்டு தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் அநுராதபுர நகரத்தில் இதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் தொல்லியல் திணைக்களம் மற்றும் கலாச்சார முக்கோண வலயம் ஆகிய இரு தரப்பினருக்கும் இந்த பணிகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

அதேபோன்று மகாவிகாரையில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ள டர்ஹெம் பல்கலைக்கழகத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளது. நாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி அந்த பணிகளைவும் விரைவில் ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். அந்த பணிகள் கலாநிதி பிரசன்ன குணவர்தனவினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மகா விகாரை என்பது அநுராதபுர வரலாற்றின் ஒரு பகுதியாகும். எனவே இந்த அதனால் அநுராதபுர நகரம் தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காக யுனெஸ்கோ அமைப்பின் தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன்.

நீண்ட காலங்களுக்கு இந்த நகரத்தின் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளுமாறு அவரிடத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளேன். இந்த பணிகளின் போது எமக்கு ஒத்துழைக்க பல்வேறு பல்கலைக்கழகங்களும் முன்வந்துள்ளன. இவ்வாறு அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல தீர்மானித்துள்ளோம்.

மதுரை, காஞ்சிபுரம்,தஞ்சாவூர் பற்றி பேசுகின்ற நாம் அதன் நான்காவது நகரமாக அநுராதபுரத்தை மறந்துவிட்டோம். எனவே அநுராதபுர நகரத்தின் அபிவிருத்திக்காக இந்த பணிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.இதற்கு இணையாக அநுராதபுரத்தில் பல ஹோட்டல்களையும் அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனால் இந்த நகரத்துக்குள் பாரிய முன்னேற்றம் ஏற்படும்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This