மட்டக்களப்பில் 12வது நாளாக இன்றும் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

மட்டக்களப்பில் 12வது நாளாக இன்றும் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

தமது தொழில் நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12வது நாளாக இன்றைய தினமும் (13) தமது பிள்ளைகளுடன் வந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக பட்டதாரிகள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தியுள்ளனர். 

ஏனைய மாவட்டங்களை போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், தமது தொழில் நியமனத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.

“பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன்”, “கல்வி கொடுத்த அரசே கொள்ளிவைக்கலாமா?”, “அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தினை அழிக்காதே” போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளையும் போராட்டக்காரர்கள்  ஏந்தியிருந்தனர்.

வருடங்கள் போகப்போக வயது போவதன் காரணமாக பின்னர் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.

CATEGORIES
Share This