இலங்கை முழுவதும் மக்களை சந்திக்கும் நாமல்: ரணிலுக்கு பொதுஜன பெரமுன வாய்ப்பளிக்குமா?

இலங்கை முழுவதும் மக்களை சந்திக்கும் நாமல்: ரணிலுக்கு பொதுஜன பெரமுன வாய்ப்பளிக்குமா?

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக அதிகாரம் எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்க உள்ளது.

தேர்தலை ஒத்திவைப்பதற்கான சில குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட இறுதி முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து இன்று திங்கட்கிழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் தேர்தல் 100 வீதம் நடைபெறும் சூழ்நிலை உதயமாகியுள்ளது.

இதனால் அனைத்துக் கட்சிகளும் கூட்டணிப் பேச்சுகளை இறுதிப்படுத்தியுள்ளதுடன், தேர்தல் பணிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன ஏற்கனவே பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதை தவிர்த்துவந்த நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் பிரசாரங்களில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளதால் காலத்தாமதத்தை ஏற்படுத்தாது தேர்தல் பணிகளை ஆரம்பிக்கவும் அக்கட்சி ஆலோசனைகள நடத்தியுள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் நாடு முழுவதும் 14ஆயிரத்துக்கும் அதிகமான கிராம சேவகர் பிரிவுகளை மையப்படுத்திய பொதுக் கூட்டங்களை நடத்த அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், முக்கிய கூட்டங்களில் நாமல் ராஜபக்ச கலந்துகொண்டு மக்கள் ஆதரவை கோர உள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான அறிவிப்பை விரைவில் வெளியிட் அக்கட்சி தீர்மானித்துள்ளது. அரசியல் மேடைகளில் பல்வேறு கருத்துகளை பொதுஜன பெரமுன வெளிப்படுத்தி வந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதே கட்சியின் இறுதி முடிவாக இருக்கும் என அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

CATEGORIES
Share This