உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும்: தேர்தல்கள் ஆணையாளருக்கு ஜனாதிபதி பணிப்பு

உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும்: தேர்தல்கள் ஆணையாளருக்கு ஜனாதிபதி பணிப்பு

உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி, எல்விடிகல வீதியில் அமைந்துள்ள இலங்கை ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, விகாரையின் மகாநாயக்க தேரரைச் சந்தித்து நலன் விசாரித்ததுடன், கலந்துரையாடிலும் ஈடுபட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

“கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக நாங்கள் இப்போது தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் வர்த்தக கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடலை முடித்துள்ளோம்.

நாங்கள் செலுத்த வேண்டிய கடனில் இருந்து சுமார் 08 பில்லியன் டொலர்களை குறைக்க முடிந்துள்ளது என்ற நற்செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

அதேபோன்று, கடனை செலுத்துவதற்கு 04 வருட கால அவகாசம் மற்றும் கடனை முழுமையாக செலுத்த 2043 வரை கால அவகாசம் பெறவும் முடிந்துள்ளது.

இந்த நலன்களைப் பயன்படுத்தி இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

அதற்காக, அடுத்த இரண்டு வருடங்களில் திட்டமிட்ட வகையில் செயற்பட்டால் மீண்டும் கடன் பெறாத நிலைமைக்கு நாட்டைக் கொண்டு செல்ல முடியும்.” என சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளேன்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 06 வருடங்களில் இருந்து 05 வருடங்களாக குறைக்க நான் தான் பரிந்துரைத்தேன்.

இன்று இந்நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

அதன்படி தற்போது அஸ்வெசும வேலைத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This