கட்சித் தாவும் படலம் ஆரம்பம்: ஐ.ம.சவுடன் இணையும் மஹிந்தவின் சகாக்கள்

கட்சித் தாவும் படலம் ஆரம்பம்: ஐ.ம.சவுடன் இணையும் மஹிந்தவின் சகாக்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி, முஸ்லிம் கட்சிகள் உட்பட பல கட்சிகளை சேர்ந்த 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டணியில் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்வதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அரசாங்கம் எத்தகைய அரசியல் பிரசாரங்களை மேற்கொண்டாலும் வெற்றியடையப்போவதில்லை. பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் மக்கள் வாழ்கின்றனர்.

இதனால் அடுத்த மாதத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தி புதிய கூட்டணியை அமைக்கும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க தமது அணி தேர்தல் களத்தில் இறங்கும்.

கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேரும் திட்டம் வெற்றியடைந்துள்ளது. தற்போது புதிதாக இணைந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளது.

இதன் காரணமாக மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெறும் பக்கம் இணைய உள்ளனர்.

வடக்கையும் கிழக்கையும் இணைத்து கூட்டணி அமைப்பது குறித்து இதுவரை எதுவித பேச்சு வார்த்தைகளும் இடம்பெறவில்லை.தற்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.” என அவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This