ரணிலுடன் ஒருபோதும் இணையவே மாட்டோம்

ரணிலுடன் ஒருபோதும் இணையவே மாட்டோம்

“ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவிதப் பேச்சுகளும் இல்லை. அவரோடு இணையப்போவதும் இல்லை. நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய ராஜபக்ஷ தரப்புடன் இருப்பவர்களுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை.”

  • இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (13) நடத்திய ஊடக சந்திப்பின்போது, ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நீங்களும் இணைந்துகொள்ளப் போவதாகக் கூறப்படும் கருத்துக்களில் உண்மை இருக்கின்றதா?’ – என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே சஜித் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் இங்கு வந்து பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றேன். இதனை நாட்டின் அனைத்து இடங்களிலுமே முன்னெடுத்து வருகின்றேன்.

நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எமது மக்களுக்கானை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு எம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றேன்.

பாடசாலைகளுக்கு, வைத்தியசாலைகளுக்கு என உதவிகளைச் செய்வது தேர்தலுக்காக அல்ல. அது எனது நீண்ட நாள் திட்டம். இதற்கமையவே நீண்ட காலமாக அனைத்து இடங்களிலும் இதனை ஒரு பணியாகச் செய்து வருகின்றேன்.

நான் இங்கு வந்து மைதானத்தில் கதைத்த ஒரு விடயத்தைச் சிலர் சர்ச்சையாக்கியுள்ளனர். அதனை வைத்து எனக்கு எதிரான பிரசாரங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக நல்லாட்சி காலத்தில் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. அதன் நினைவில்தான் மைதானம் தொடர்பாக இளைஞர்களிடம் வினவினேன். ஆனால், மண்டைதீவு என நினைவு வரவில்லை.

இதனால் மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றோம். ஆகவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதற்கட்டதாக இந்த மைதானத்தை அமைப்போம்.

இப்போது நாட்டின் அரசியல் வேறு வியூகத்தில் செல்கின்றன. அதிலும் ஜனாதிபதி ரணிலுடையடைய செயற்பாடு ஜனாதிபதித் தேர்தலை முன்னிறுத்தி நடக்கின்றதேயொழிய சாதாரண மக்களுக்கானது அல்ல.

நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படும் நபர்களுடன்
ஒரு நாளும் நான் இணைந்து செயற்படப்போவதில்லை. அவ்வாறானவர்களுடன் எந்தவித பேச்சுகளும் இல்லை.

நான் இப்போது புதிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை புதிய அரசியல் பிறாண்டாக எனது பணத்தை ஆரம்பித்திருக்கின்றேன். இதற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டும்.” – என்றார்.

CATEGORIES
Share This