ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு

சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரு வருடங்களுக்கு நீட்டிப்பதாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலத்தையும் அதனடிப்படையில் இரு வருடங்களுக்கு நீடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பதவிக் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தால் பெரும்பாலான அமைச்சர்கள் அதற்கான சர்வஜன வாக்கெடுப்புக்கு இணக்கம் தெரிவிப்பார்கள் என அரசியல் வட்டாரங்களிலில் பேசப்படுகிறது.

அதேவேளை, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கும் சர்வஜன வாக்கெடுப்பை எதிர்வரும் ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, ஜனாதிபதிக்கு சமீபமான பெரும்பாலானோரின் நிலைப்பாடு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது சிறந்தது எனவும் இரு வருடங்களில் நாடு ஸ்தீரமடைந்த பின் தேர்தலை நடத்துவது சிறந்தது என்பது அவர்களின் நோக்கமாக உள்ளது எனவும் அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1982ஆம் ஆண்டில் ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியாக பதவி வகிக்கும் போது நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீட்டிக்க மேற்கொண்ட சர்வஜன வாக்கெடுப்பு முறைமையை தற்போது மேற்கொள்ள முடியுமா என அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் சிலர் சட்டத்தரணிகளிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவ்வாறு நீதிமன்றத்தின் முன்னிலையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படின் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான குழுவிலும், பத்தரமுல்லை ‘Waters edge‘ ஹோட்டலிலும் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் முஸ்லிம், தமிழ் உறுப்பினர்கள் சுமார் 30க்கும் அதிகளவில் காணப்படுவதால் அவர்களில் பெருமபாலானோர் சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் அவர்களின் நிலைப்பாட்டை இன்னும் தெளிவாக முன்வைக்கவில்லை.

இதன் காரணமாக சர்வஜன வாக்கெடுப்புக்கு அவர்களின் விருப்பம் கிடைக்குமா கிடைக்காதா என்பது தொடர்பில் உறுதியான ஒரு சூழல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டுமெனில் அரசியலமைப்பை மீறிய ஒரு சட்டத்தை அரசாங்கம மூலம் தயாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், சர்வஜன வாக்கெடுப்பு கொண்டு வரப்படுமேயானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தயார் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This