ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 ஆண்டுகள்; தமிழ் ஊடகத்துறைக்கு எதிரான முதலாவது பாரிய அச்சறுத்தல்

ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 ஆண்டுகள்; தமிழ் ஊடகத்துறைக்கு எதிரான முதலாவது பாரிய அச்சறுத்தல்

உலகில் ஊடக சுதந்திரம் பேசப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் தமிழ் ஊடகத்துறை 1980 களிலேயே அடக்கு முறைக்கு உள்ளானது.

இலங்கை இராணுவத்துக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே 1981 யாழ் நகரில் இருந்து ஈழநாடு நாளிதழின் காரியாலயம் திட்டமிடப்பட்டு தீயிடப்பட்டது.

அதாவது தமிழ் ஊடகத்துறைக்கு எதிரான அடக்குமுறை அச்சுறுத்தல் ஆரம்பிக்கப்பட்டு இன்று 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழநாடு பத்திரிகை காரியாலயம் 1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி அதிகாலை எரிக்கப்பட்டமை ஊடகத்துறையின் இருண்ட யுகமாகும்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளை ஈழநாடு பத்திரிகை முதன்மைப்படுத்தி செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது. இலங்கையில் கொழும்பில் இருந்து பத்திரிகைகள் வெளிவந்த காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை தமிழர்களின் அரசியல் உரிமை விடயத்தில் மிக முக்கிமான பங்கு வகித்திருந்தது.

பிராந்திய பத்திரிகைகள் தமிழர் பிரதேசங்களிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மாத்திரமே வெளிவந்தன. இதனால் தமிழ் மக்களினுடைய பாரம்பரியங்களும் கல்விச் செயற்பாடுகளும் முக்கியத்துவமடைந்தன.

1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஐந்தில் ஆறு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இலங்கையில் ஒற்றையாட்சியை நிறுவி, 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பை உருவாக்கியிருந்தது. அந்த யாப்பில் தமிழ் மக்களின் உரிமைகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஒற்றையாட்சிக் கோட்பாட்டை மையமாகக் கொண்ட இந்த அரசியல் யாப்பை ஈழநாடு பத்திரிகை வன்மையாக கண்டித்திருந்தது.

அதுமாத்திரமன்றி அப்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிவகித்த அமரர் ஜே.ஆர்.ஜெயவர்தனவையும் அவரது தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும் ஈழநாடு பத்திரிகையை விமர்சித்திருந்தது.

இந்தக் காரணங்களின் அடிப்படையிலேயே யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்ட அன்றிரவு ஈழநாடு பத்திரிகை காரியாலயமும் தீக்கிரையாக்கப்பட்டது.

இதன்போது காரியாலயத்தில் பணி புரிந்து கொண்டிருந்த ஊடகவியலாளர் அமரர் ஐயா சச்சிதானந்தம் ஈழநாடு பணிப்பாளர் எஸ்.சிவானந்தன் ஆகியோர் காயமடைந்தனர். ஏனைய ஊழியர்கள் தப்பியோடினர்.

நகரத்தின் மத்தியில் இருந்த யாழ்ப்பாணம் மாநகரசபைக் கட்டடத்திற்கும் தீயிடப்பட்டது. ஆகவே வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தமிழர் தாயகமாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த தீ வைப்பு சம்பவங்களைக் கூறலாம்.

இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட இந்த நடவடிக்கைகளால் ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களையும் அவர்களின் போராட்டத்தையும் எவ்வாறு பயங்கரவாதமாகக் கூறமுடியும் என்ற கேள்வி எழுகின்றது.

30 ஆண்டு கால அகிம்சைப் போராட்டமும் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டமும் அழிக்கப்பட்ட நிலையில் இந்தக் கேள்விக்குப் பதில் தரவேண்டியவர்கள் யார்? என்பது தான் தமிழ் மக்களினுடைய மனக் குமுறலாக உள்ளது.

வடக்கு- கிழக்கு இணைந்த தமிழர் தேசம் அங்கீகரிகப்பட வேண்டும் என்பதையே முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நிறைவு நினைவேந்தல் நிகழ்வில் மக்கள் பிரகடனமாக வெளியிட்டிருந்தனர்.

CATEGORIES
Share This