டென்மார்க்கில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி மோசடி: பொது மக்களுக்கு எச்சரிக்கை

டென்மார்க்கில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி மோசடி: பொது மக்களுக்கு எச்சரிக்கை

டென்மார்க்கில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வரும் மோசடி குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

இத்தாலி வேலைவாய்ப்பு தொடர்பான முகநூல் பக்கத்தில் இந்த மோசடி தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த போலி விளம்பரத்தில், நோயாளிகளை பராமரிக்கும் பணியாளர்கள், செவிலியர்கள், பேக்கிங் தொழிலாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், பாதுகாவலர்கள், கட்டுமான தொழிலாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்காக வெளிநாடு செல்வது இலவசம் என்றும், மாதச் சம்பளம் மூன்று லட்சம் ரூபாய் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உயர் தொழில் தகைமைகளைக் கொண்டவர்களுக்குக் கூட தொழில் வாய்ப்புகள் இல்லை என அந்நாட்டில் வசிக்கும் இலங்கை வைத்தியர் இந்துனில் விஜேரத்ன கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

முகநூலில் இந்த பதிவை ஏராளமானோர் பார்த்துள்ளனர், நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு குறித்து விசாரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் வினவிய போது, ​​இது முழுக்க முழுக்க மோசடியான நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க் போன்ற ஒரு நாட்டில் இவ்வாறான தொழில் வாய்ப்புகள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This