திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு தொடர்பில் கைதானவருக்கு பிணை !

திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு தொடர்பில் கைதானவருக்கு பிணை !

திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று புதன்கிழமை (22) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குச்சவெளி சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்று வந்த குறித்த வழக்கானது விசாரணைக்காக நீதிவான் திருமதி ஜீவராணி கருப்பையா முன்னிலையில் இன்று (22) எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கில் எதிரி சார்பாக பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி தேவராஜா ரமணன் இன்றையதினம் முன்னிலையாகியிருந்தார்.

குறித்த கைதானது, கண்கண்ட சாட்சியங்கள், ஆதாரங்கள் எவையும் இன்றி ஊகத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் குறித்த நபர் புல்மோட்டை – இல்மனைற் தொழிற்சாலையில் கடமையில் இருந்ததாகவும் குறித்த சந்தேக நபரிடம் இருந்து எவ்வித சான்றுப் பொருட்களும் கைப்பற்றப்படவில்லை போன்ற சமர்ப்பணங்களை எதிராளியின் சார்பாக சட்டத்தரணி முன்வைத்திருந்தார்.

இதையடுத்து சந்தேக நபரை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை, திரியாய், ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் மார்ச் 14ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

சம்பவம் தொடர்பாக அங்கு பணியாற்றிய வைத்தியரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் நபர் ஒருவர் குச்சவெளி பொலிசாரினால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு அரச சொத்துக்கு தீங்கு விளைவித்தமை மற்றும் தண்டனை சட்டப்பிரிவுக்குக்கீழும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் 67 நாட்களுக்குப் பின்னர் குறித்த நபர் இன்று (22) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This