கோணேஸ்வர ஆலய வழக்கு தொடர்பாக முகநூலில் விமர்சனங்களை முன்வைத்தவருக்கு அழைப்பாணை

கோணேஸ்வர ஆலய வழக்கு தொடர்பாக முகநூலில் விமர்சனங்களை முன்வைத்தவருக்கு அழைப்பாணை

திருகோணமலை மாவட்ட நீதிமன்றினால் கோணேஸ்வர ஆலய வழக்கு தொடர்பாக முகநூலில் விமர்சனங்களை முன்வைத்த நபர் ஒருவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு 8ஆம் இலக்க நீதிமன்ற நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டத்தின்கீழ் சுந்தரலிங்கம் சிவசங்கரன் என்பவருக்கு எதிராகப் புதன்கிழமை (22) திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவை ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் சமர்ப்பணம் செய்திருந்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணியுடன் கனிஷ்ட சட்டத்தரணி திருமதி. சி.சண்முகியும் மனுதாரர் சார்பாக இவ்வழக்கில் ஆஜராகியிருந்தார்.

கோணேஸ்வர ஆலயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த எதிராளி, குறித்த வழக்கைத் தாக்கல் செய்தவர்களையும், குறித்த வழக்கில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகளையும் விமர்சித்திருக்கின்றார்.

இது 2024ஆம் ஆண்டு 8ஆம் இலக்க நீதிமன்ற நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டத்தின்கீழ் குற்றச் செயலாகும் எனவும் அது தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்து குறித்த எதிராளிக்கு நீதிமன்றானது அழைப்பாணையை அனுப்புவதற்கான கட்டளையை ஆக்கும்படியாகவும் மேலும் குறித்த அழைப்பாணையானது நீதிமன்ற பிஸ்கால் மூலமும், பதிவுத்தபால் மூலமும் அனுப்பும்படியான கட்டளையை ஆக்கும்படியாகவும் வழக்காளிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளால் மன்றில் கோரப்பட்டது.

குறித்த சமர்ப்பணத்தை மன்று ஏற்றுக் கொண்டு குறித்த எதிராளிக்கு அழைப்பாiணை அனுப்பும்படி மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சட்டத்தின் கீழ் ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட முகநூல் பாவனையாளருக்கு எதிராகத் திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This