முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 132 வது ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 132 வது ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

வெளிநாட்டில் உள்ளவர்களை நம்பியிருந்தால் எமது நாடு வளம் பெறாது.தொழில்நுட்பம்சார்ந்து உழைக்க கற்றுக்கொண்டு சொந்தக்காலில் நிற்கவேண்டும் அதற்காக மாணவர்கள் பயிற்சியளிக்கப்படவேண்டும் என்ற கருத்தினை சுவாமி விபுலானந்தர் வலியுறுத்திவந்துள்ளதாக மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மஹராஜ் அவர்கள் தெரிவித்தார்.

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக்கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 132வது ஜனன தினம் மட்டக்களப்பில் இன்று(03) அனுஷ்டிக்கப்பட்டது.

சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மஹராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபையின் தலைவர் கே.பாஸ்கரன் மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது சமாதியில் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று மாலை அணிவிக்கப்பட்ட மலர் கொண்டு வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வின்போது விசேடமாக சுவாமி விபுலானந்தரின் வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ பாடல் பாடப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த ஆண்டு சுவாமி விபுலானந்தரின் துறவறத்தின் நூற்றாண்டு நிகழ்வாக அனுஸ்டிக்கப்படவள்ளதுடன் அவர் எழுதிய நூல்களை மீண்டும் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மஹராஜ் இதன்போது தெரிவித்தார்.

CATEGORIES
Share This