கைகளை இழந்தவருக்கு மீண்டும் கைகளைப் பொருத்தி சாதனை!

கைகளை இழந்தவருக்கு மீண்டும் கைகளைப் பொருத்தி சாதனை!

இந்தியா – டெல்லியில் விபத்தில் இரண்டு கைகளை இழந்த ஒருவருக்கு தனியார் மருத்துவமனையொன்றின் மருத்துவர்கள் குழுவொன்று மாற்று கைகள் பொருத்தி சாதனை படைத்துள்ளது.

பெயிண்டர் ஒருவர் அவரது மூலதனமான தனது இரு கைகளையும், 2020 ல் நடந்த ரயில் விபத்து ஒன்றில் இழந்துள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் இருக்கும் பாடசாலை ஒன்றின் முன்னாள் நிர்வாக தலைவரான மீனா மேத்தா என்பவர் விபத்து ஒன்றில் மூளை சாவு அடைந்துள்ளார்.

இவர் தனது இறப்பிற்கு பிறகு உடல் உறுப்புகள் தானம் கொடுக்க ஏற்கெனவே சம்மதித்திருந்ததால், உறவினர்களின் அனுமதியுடன் இவரது சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கருவிழிகள் ஆகியவை வெவ்வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை மாற்றியமைக்கப்பட்டது.

அதேபோல் மீனா மேத்தாவின் இரு கைகள் அகற்றப்பட்டு, விபத்தில் கைகளை இழந்த பெயிண்டருக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

உடல்மாற்று அறுவைசிகிச்சை என்பது அசாதாரணமான நிகழ்வு, இதற்கு மருத்துவர்கள் குழு கடின உழைப்பை மேற்கொள்ளவேண்டும், தவிர 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த அறுவை சிகிச்சையில் நன்கொடையாளரின் கைகளுக்கும் பெறுநரின் கைகளுக்கும் இடையே உள்ள தமனி, தசை, தசை நார், மற்றும் நரம்பை இணைக்கும் பணியானது மருத்துவர்களுக்கு மிகவும் சவாலான விடயமாகும்.

இதில் வெற்றி பெற்ற சர் கங்கா ராம் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், மீண்டும் பெயிண்டரின் கைகள் பிரஷ் பிடித்து படம் வரைவதற்கு உதவி செய்து அவரின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This