பழங்குடியினர் திரிணமூல் கட்சிக்கு வாக்கு அளிக்காததால் சித்ரவதை: விசாரணை குழு தகவல்!

பழங்குடியினர் திரிணமூல் கட்சிக்கு வாக்கு அளிக்காததால் சித்ரவதை: விசாரணை குழு தகவல்!

மேற்குவங்கம் சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரேஷன் ஊழல், நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து பழங்குடியின மக்களிடம் நேரில் விசாரணை நடத்த 3 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பழங்குடியின ஆணைய குழுவினர் சந்தேஷ்காலி சென்றனர்.

இந்த குழுவுக்கு ஆணையத்தின் துணைத் தலைவர் அனந்த நாயக் தலைமை தாங்கினார். இந்த குழுவினர் தங்கள் விசாரணையை முடித்துவிட்டு டெல்லி திரும்பினர். இந்த விசாரணை குறித்து குழுவின் தலைவர் அனந்த நாயக் கூறியதாவது:

பழங்குடியின பெண்களை ஷேக் ஷாஜகானும் அவரது ஆதரவாளர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததாக 50 க்கும்மேற்பட்ட முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன. மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கிடைக்கும் வருவாயையும் தங்களிடம் கொடுக்கும்படி பழங்குடியின பெண்களை ஷாஜகான் வற்புறுத்தியுள்ளார். அவர்கள் அந்த பணத்தை செலவு செய்து விட்டால் கடன் வாங்கிகொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். இது போன்ற அராஜகத்தை நாட்டின் வேறு எங்கும் பார்த்ததில்லை.

தேர்தல் நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப்போடாத மக்களை ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சித்ரவதை செய்துள்ளனர். உள்ளூர் பெண்களை இரவு நேர ஆலோசனை கூட்டத்துக்கு வரும்படி ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். வரவில்லைஎன்றால் அவர்கள் குடும்பத்தினரையும் ஷாஜகான் ஆட்கள் சித்ரவதை செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் போலீஸில் புகார் அளி்ததால், போலீஸார் ஷாஜகான் மீது வழக்கு பதிவு செய்வதில்லை. மாறாக ஷாஜகானிடம் பேச்சுவார்த்தை நடத்தும்படி கூறியுள்ளனர். ஷாஜகானுக்கு ஆதரவாக போலீஸார் செயல்பட்டுள்ளனர். யாராவது தங்கள் நிலத்தை தரவில்லை என்றால், அதில் கடல் நீரை கொண்டு வந்து ஷாஜகான் ஆட்கள் ஊற்றியுள்ளனர். உள்ளூர் மக்களை மிரட்டி 10 கி.மீ தூரத்துக்கு உள்ள நிலங்களை ஷாஜகான் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இவ்வாறு அனந்த நாயக் தெரிவித்துள்ளார்.

ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்துஅறிக்கை தாக்கல் செய்யும்படி மேற்கு வங்க தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு தேசிய பழங்குடியின ஆணையம் கடந்த 20-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This