ஜெய்சங்கருடன் கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு!

ஜெய்சங்கருடன் கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு!

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, தமிழ் நாட்டின் கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

பாக்-வளைகுடா பகுதியில் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் கடற்றொழிலாளர்கள் விடயத்தில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசின் ஆதரவை கோரி இந்த சந்திப்பு இடம்பெற்றது.

தமிழக ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்த கடற்றொழிலாளர்களின் சங்கத் தலைவர் பி ஜேசுராஜா ஊடகங்களுக்கு கருத்துரைத்த போது, தற்போதைய நிலவரம் தொடர்பில் எடுத்துரைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் தமது கடற்றொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் பிரதிநிதிகள், ஜெய்சங்கரிடம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் இடம்பெறும் கைதுகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, உறுதியளிக்கும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் ஒரே தீர்வாகும் என்று கடற்றொழிலாளர்கள் இந்த சந்திப்பின்போது வலியுறுத்தினர்.

இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இழுவை படகுகளின் எண்ணிக்கை குறித்தும் வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

2018 முதல், பறிமுதல் செய்யப்பட்ட 150க்கும் மேற்பட்ட இழுவை படகுகள் திருப்பித் தரப்படவில்லை என்ற தகவலை ராமநாதபுரம் கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதே போன்று நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் இருந்தும் ஒரு குழுவினர் புதுடில்லியில் அமைச்சர்களை சந்தித்து கருத்துகளை கூறியுள்ளனர்.

இந்தநிலையில், ராமேஸ்வரத்தில் கடற்றொழிலாளர் தலைவர்களுடன் காவல்துறை, வருவாய்த்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் அமைதிக் குழுக் கூட்டம் ஒன்றை நேற்று நடத்தினர்.

காலவரையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை மறுபரிசீலனை செய்யவும், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கடற்றொழிலாளர்களிடம் கோரியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This