எண்ணற்ற பலன்களும், தலைமுறைக்கும் புண்ணியம் சேர்க்கும் தை அமாவாசை வழிபாடு இன்று!

எண்ணற்ற பலன்களும், தலைமுறைக்கும் புண்ணியம் சேர்க்கும் தை அமாவாசை வழிபாடு இன்று!

“தை அமாவாசை வழிபாடு” இன்று (09) வெள்ளிக்கிழமை இந்துக்களால் வழிபாடு செய்யப்படுகின்றது. தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன் போன்றவற்றை அந்தந்த பிறவிகளிலேயே நாம் கட்டாயம் தீர்க்க வேண்டும் என்று ஆன்றோர்கள் சொல்வார்கள்.

நம்முடன் வாழ்ந்து மறைந்த நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும் எனவும் சொல்லப்படுகிறது.

பித்ரு கடன் தீர்ப்பதற்காக, சிரத்தையாக சிரார்த்தம் (திதி) செய்வது நன்மை தரும். அமாவாசை மற்றும் மாதப் பிறப்புகளில் தில தர்ப்பணம் செய்ய வேண்டும்.

மாதம் தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் தர முடியாவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை வரும் தை அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பதால், முன்னோர்களின் சாபம் நீங்குவதுடன், அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர்.

உத்தராயண காலம் ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை ஆடி அமாவாசை எனவும் அன்றைய தினம் தர்ப்பணம், திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

இறந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியமே சிராத்தம். சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், ஜலம், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும்.

தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய கோத்திர தாயாதிகளுக்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய மிக முக்கிய கடமையாகும் இது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்.

பூலோகம் வந்த முன்னோர்கள் மீண்டும் பிதுர்லோகம் செல்லும் தை அமாவாசை நாளில் புனித நீராடி, அவர்களுக்கு எள்ளும் நீரும் அளித்தால் எண்ணற்ற பலன்களும், தலைமுறைக்கும் புண்ணியம் சேரும் என்கின்றன புராணங்கள்.

பூமியில் பிறந்தவர்கள் பாவ புண்ணியத்திலிருந்து தப்பமுடியாது. பாவங்களில் மகா பாவமாக கூறப்படுவது பித்ரு கர்மாவை நிறை வேற்றாமல் இருப்பதுதான். உயிருடன் இருக்கும் பெரியவர்களை மதிக்காமல், பலர் உள்ளனர். அந்த உயிர்கள் படும் துன்பம், பாவங்கள் ரூபத்தில் கவனிக்க தவறியவர்களையே வந்து சேரும்.

நாம் எங்கு சென்றாலும் உடன் வருவது பாவபுண்ணியங்கள் மட்டுமே. பித்ரு பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய ஏற்படுத்தப்பட்டது நம் முன்னோர்களுக்கு மறக்காமல் காரியம் நிறைவேற்றவேண்டும்.

நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம். அமாவாசை நாளில் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு.

தர்ப்பணம் செய்த பிறகு காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பர் என்பதும் ஐதீகம்.

CATEGORIES
TAGS
Share This