இளையராஜா மகள் பவதாரிணியின் உடல், தாயின் சமாதி அருகே நல்லடக்கம்!

இளையராஜா மகள் பவதாரிணியின் உடல், தாயின் சமாதி அருகே நல்லடக்கம்!

இளையராஜாவின் மகளும், மறைந்த பாடகியுமான பவதாரிணியின் உடல் தேனி அருகே உள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புற்றுநோய் காரணமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி மாலை காலமானார். அவரின் உடல் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை வரை மக்கள் அஞ்சலிக்காக தியாராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது, மத்திய அமைச்சர் எல் முருகன், தமிழக அமைச்சர் உதயநிதி, திரைப்பிரபலங்களான சிவக்குமார், கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி பத்மினி, ராதிகா, விஜய் ஆண்டனி, சேரன், லிங்குசாமி, பரத்வாஜ், மோகன் ராஜா, மனோஜ் பாரதிராஜா, ராமராஜன், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, சுஜாதா, ஸ்வேதா மோகன், சூரி, ஆர்.கே செல்வமணி, பேரரசு, பாக்யராஜ், சுஹாசினி, இயக்குனர்கள் எழில், அமீர், ராம், சந்தான பாரதி, வெற்றிமாறன், சுரேஷ் காமாட்சி, சுதா, பிரியா, இளன், இசையமைப்பாளர் தினா, பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், ஏ.ஆர்.ரஹ்மான் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன், மிர்ச்சி சிவா, வெங்கட்பிரபு அணியினர் உள்ளிட்டோர் பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பவதாரிணியின் உடலை இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு பிரத்யேக அமரர் ஊர்தி மூலம் நேற்று இரவு எடுத்துச் சென்றனர்.

இன்று (27) காலை அவரது உடல் தேனிக்கு கொண்டு வரப்பட்டது. கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன் மற்றும் இளையராஜாவின் உறவினர்களும் தேனி வந்தனர்.

தேனி, லோயர்கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை தோட்டத்தில் பவதாரிணி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கு டிரம்ஸ் சிவமணி, நடிகர்கள் ஜோன் விஜய், அபி சரவணன், இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பவதாரிணி உடல் சாந்தி அடைய ஓதுவார்கள் மூலம் திருவாசகம் பாடப்பட்டது. தொடர்ந்து இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து இளையராஜாவின் அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் நினைவிடத்திற்கு இடையில் பவதாரிணியின் உடல் மாலை 5 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது

CATEGORIES
TAGS
Share This