வேட்பாளர்களும் சிவில் அமைப்புகளும் இணைந்து செயற்படுவதன் அவசியம்; திருமலை தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம்

வேட்பாளர்களும் சிவில் அமைப்புகளும் இணைந்து செயற்படுவதன் அவசியம்; திருமலை தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம்

வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவது பற்றியும் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பது தொடர்பாகவும் நடத்தப்பட்ட கூட்டம் தொடர்பில் திருகோணமலை தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வேட்பாளர்களும் சிவில் சமூக அமைப்புகளும் எவ்வாறு இணைந்து செய்படுவது என்பது தொடர்பாகவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை வருமாறு,

கடந்த செம்ரெம்பர்‌ மாதம்‌ 24ஆம்‌ திகதி நாடளுன்றம்‌ கலைக்கபட்டு பொதுத்தேர்தல் 2024.11.14ஆம்‌ திகதி அறிவிக்கப்பட்டதன்‌ பின்னர்‌ தமிழ்த்‌ தேசியக்‌ கூட்டமைப்பு பிளவுபட்ட நிலையிலும்‌, பல்வேறு தமிழ்‌ கட்சிகள்‌ போட்டியிடும்‌ சூழலிலும்‌ திருகோணமலை மாவட்ட தமிழ்த்‌தேசிய நாடளுமன்ற பிரதிநிதித்‌துவத்தை எவ்வாறு தக்க வைப்பது என்பது தொடர்பாக திருகோணமலை மாவட்ட தமிழ்‌ சமூக செயற்பாட்டாளர்‌ இணையத்தின்‌ அங்கத்தவர்களின்‌ வேண்டுகோளுக்கு அமைவாக பின்வரும்‌ ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

செப்ரெம்பர்‌ 29 மிகக்குறுகிய கால முன்‌அறிவித்தலுடன்‌ திருகோணமலையில்‌ உள்ள 27 சிவில்‌ மற்றும்‌ சமூக சேவை அமைப்புகளின்‌ பிரநிதிகள் அழைக்கப்பட்டு கலந்துரையாடல்‌ இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில்‌ பின்வரும்‌ முடிவுகள்‌ எடுக்கப்பட்டன.

  1. தமிழ்த்‌ தேசிய கட்சிகள்‌ ஒன்றிணைந்து திருகோணமலையில் ஒரணியாகத்‌ தேர்தலில்‌ களமிறங்க வேண்டுமெனக்‌ கட்சிகளிடம்‌ வேண்டுகோள்‌ விடுப்பது.
  2. தமிழரசுக்‌ கட்சி, தமிழ்‌ தேசிய மக்கள்‌ முன்னணி, ஜனநாயக தழிழ்த்‌ தேசியக்‌ கூட்டணியில்‌ உள்ள கட்சிகளுக்கு தலா ஒரு ஆசனம்‌ வீதம்‌ ஒதுக்கி ஒரு தேர்தல்‌ கூட்டணியைத்‌ திருகோணமலை மாவட்ட தேர்தலுக்காக அமைத்தல்
  3. மக்களின்‌ தற்போதைய எதிர்பார்ப்பை அறிந்து அதற்கேற்ப ஆளுமைநிறைந்த வேட்பாளர்களை நியமிக்குமாறு கட்சிகளை வேண்டுதல்‌, எனினும்‌ வேட்பாளர்‌ தெரிவில்‌ அழுத்தங்களைப்‌ பிரயோகிப்பதில்லை.

இந்‌நடவடிக்கைளை‌ செயற்படுத்தவென ஒன்பது பேர்‌ கொண்ட செயற்குழுவானது அன்றைய கூட்டத்தில்‌ பங்குபற்றிய சிவில்‌ அமைப்புகளில்‌ இருந்து தெரிவுசெய்யப்பட்டனர்‌.

இச்செயற்குழு உறுப்பினர்கள்‌ மாவட்டத்தலைமை மற்றும்‌ கட்சித்‌ தலைமை பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்ததைகளை மேற்கொண்டு மேற்சொன்ன முன்மொழிவுகளை செயற்படுத்துவர் எனவும்‌ ஏனைய சமூக அமைப்புப்‌ பிரதிநிதிகள்‌ இதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்குவர் எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதேதினம்‌, ஒன்பது பேர்‌ கொண்ட செயற்குழு கூடி, கட்சித்‌ தலைமைகளுடன்‌ யார்‌ யார்‌ இணைப்புகளை ஏற்படுத்துவது என்பது தொடர்பாகப்‌ பொறுப்புக்கள்‌ பகிர்ந்துகொள்ளப்பட்டு அதன்‌ அடிப்படையில்‌ மாவட்டத்தலைமை மற்றும்‌ கட்சித்தலைமைகளுடன்‌ பல சுற்றுக்‌ கலந்துரையாடல்களை இச்செயற்குழு நடத்தியிருந்தது.

தமிழரசுக கட்சியுடனான சந்திப்பு – மாவட்டத்‌ தலைமையுடனும் கட்சித் தலைமையுடனும் நிகழ்ந்த பல சுற்றுக்‌ கலந்துரையாடல்களின்‌ இறுதியில் மற்றைய கட்சிகளுடன்‌ ஒன்றிணைந்து இந்‌ நாடாளுன்றத்‌ தேர்தலில்‌ போட்டியிடுவதற்கு தங்களுக்கு சம்மதம் எனவும் தங்களுக்கு 5 ஆசனங்கள்‌ வழங்கப்பட வேண்டும்‌ எனவும்‌ வீட்டு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும்‌ எனவும்‌ நிபந்தனைகள்‌ முன்‌ வைக்கப்பட்டபோதும்‌ சமரசக்‌ கலந்துரையாடல்களின்‌ பின்‌ 4 ஆசனங்களிற்கு கட்சி இணக்கம்‌ தெரிவித்தது.

அத்துடன்‌ கட்டாயமாக பெண்வேட்பாளர்‌ ஒருவருக்கு, தமிழரசுக்கட்சியினூாடாக ஆசனம்‌ வழங்கவேண்டும்‌ என்று செயற்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும்‌ இக்கோரிக்கை, இறுதிவரை நிறைவேற்றப்படவில்லை.

ஜனநாயக தமிழ்த்‌ தேசிய கூட்டணி மாவட்டத்‌ தலைமையுடனும்‌ அதன்‌ பின்‌ கூட்டணித்‌ தலைமையுடனும் மேற்கொள்ளப்பட்ட பல சுற்றுச் சந்திப்புகளின்‌ இறுதியில்‌ இந்‌ நாடாளுமன்றத்‌ தேர்தலில்‌ போட்டியிடுவதற்காக பொதுச்‌ சின்னமாக‌ வீட்டுச்‌ சின்னத்தில்‌ போட்டியிடவும்‌ அதற்காக 3 ஆசனங்களைத்‌ தமது கட்சிக்காகப்‌ பெற்றுக்கொள்ளவும்‌ இணக்கம்‌ தெரிவித்தனர்‌.

தமிழ்த்‌ தேசிய மக்கள்‌ முன்னணியின் தலைமையுடனான கலந்துரையாடலில்‌, அக்‌ கட்சியின்‌ தலைவர்‌ தமது கட்சியின்‌ தமிழ்த்‌ தேசிய கொள்கைகளை தெளிவுபடுத்தியதுடன்‌ மற்றைய தமிழ்‌ கட்சிகளின்‌ கொள்கை முரண்பாடு காரணமாக தாம் தனித்தே இத் தேர்தலில் போட்டியடப் போவதாகவும் தெரிவித்தார்‌.

தமிழர்‌ விடுதலைக்‌ கூட்டணியின்‌ மாவட்ட மற்றும்‌ தலைமையுடனான கலந்துரையாடலில்‌, தற்போது மற்றைய கட்சிகளினால்‌ அதிக ஆசனங்கள்‌ கேட்கப்படும்‌ சூழ்நிலையை தெளிவுபடுத்திய போது, அதனை புரிந்து கொண்டு திருகோணமலைத்‌ தமிழத்‌ தேசிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவம்‌ அறிந்துகொண்டு தாம்‌ மாவட்டத்தில்‌ போட்டியிட விரும்பவில்லை எனவும்‌ தெரிவித்தனர்‌.

ஒருங்கிணைவை ஏற்படுத்துவதற்காக ஒக்ரோபர் 7ஆம் திகதி வரை பல சுற்றுக் கலந்துரையாடல்கள் தமிரசுக்‌ கட்சி தலைமையுடனும்‌, ஜனநாயக தமிழ்த்‌ தேசிய கூட்டணியுடனும்‌ இடம்‌ பெற்றது.அதன்‌ நிறைவாக ஜனநாயக தமிழத்‌ தேசிய கூட்டணி வீட்டு சின்னத்தில்‌ தேர்தலில்‌ போட்டியிட உடன்பட்டதோடு 3 ஆசனங்களை தங்களது பங்காளிக் கட்சிகளோடு பகிர்ந்து கொள்ளுதல் என்ற வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும்‌ தமிழரசுக்‌ கட்சியினரும்‌ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 4 ஆசனங்களுக்கு இணங்கிக்‌ கொண்டனர்‌

வேட்புமனுக்கள்‌ மற்றும்‌ சிவில்‌ சமூக அமைப்புகளின்‌ பிரநிதிகளுடனான ஒருங்கிணைப்புடன் ஒக்ரோபர் 11ஆம் திகதி பூர்த்தியாக்கப்பட்டு தேர்தல் திணைக்களத்தில் சமர்பிக்கப்பட்டது.

ஒக்ரோபர்‌ 13ஆம்‌ திகதி தெரிவுசெய்யபட்ட வேட்பாளர்களுக்கும்‌ சிவில்‌ அமைப்புகளின்‌ செயற்குழு உறுப்பினர்கள்‌ மற்றும்‌ அங்கத்தவர்களுக்கும்‌ இடையில்‌ சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது.

அச்சந்திப்பில் பொதுச்சின்னமான வீட்டுச் சின்னத்திற்கு தமிழ் மக்களின் வாக்கு எண்ணிக்கையை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றியும் அதற்காக வேட்பாளர்களும் சிவில் அமைப்புகளும் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

ஒவ்வொரு வேட்பாளரும் அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற முயற்சித்து மாவட்டத்தில் 50,000ற்கும் அதிகமான வாக்குகளை பெறுது இலக்கு எனவும் முடிவு செய்யப்பட்டது.

வேட்பாளர்களோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களோ ஒருவர் மீது ஒருவர் சேறு பூசும் நடவடிக்கைகள் தொடர்வது ஆரோக்கியமான விடயம் அல்ல என்றும் எடுத்துக் கூறப்பட்டது.

தேர்தலின் பின்பும் வெற்றி பெறும் வேட்பாளரும் ஏனைய ஆறு வேட்பாளர்களும் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து மக்களின் நலனுக்காக பணியாற்றுவதாகவும், பயணிப்பதாகவும் உறுதி வழங்கினர்.

இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிவில் சமூக அமைப்பினருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்களிற்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ் ஊடக அறிக்கை மூலம் திருகோணமலை மாவட்ட தமிழ் வாக்காளர்களிடம் நாம் வினயமாகக் கேட்டுக்கொள்வது யாதெனில் நான்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுச்சின்னமாக வீட்டுச்சின்னத்தை தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

எனவே, 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் பொதுச்சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிப்பதன மூலம் தமிழத் தேசிய இருப்பிற்காக ஒரு நாடாளுமன்ற பிரநிதித்துவத்தை திருகோணமலையில் உறுதிசெய்ய ஒன்றிணைவோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This