ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவு வழங்க தயார்

ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவு வழங்க தயார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மலையக மக்களுக்கு பத்து பேர்ச் காணியை வழங்க நடவடிக்கை எடுத்தால் தாம் ஆதரவளிக்க தயாராக உள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்டப்பகுயில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வறுமை நிலையில் இருந்து வந்த ஒருநபர். மலையக மக்களுக்கு வீட்டுரிமை, மலையக இளைஞர், யுவதிகள் அதிகமாக கொழும்பில் உள்ள வீடுகளுகளிலும், உணவகங்களிலும் தொழிலுக்கு அமர்த்தப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்கட்சியில் இருந்த காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் அதிகமாக குரல் கொடுத்தவர்.

பொது தேர்தல் என்பது மலையக மக்களுக்கு முக்கியமான ஒரு தேர்தலாகும். ஏன் எனில் மலையக பிரதிநிதிகளை இல்லாமல் செய்வதற்கான சூழ்ச்சி இடம்பெற்று வருகிறது. மலையகத்தில் புதிய மாற்றம் வேண்டும் என சுயேச்சையாக சிலர் போட்டியிடுகின்றனர். சிலர் கூறுகின்றனர் மலையக மக்களுக்கு எவ்வித அபிவிருத்திகளும் முன்னெடுக்கவில்லை என.

மலையத்தின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் குறைவடைந்தால் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் உரிமைகளுக்கும் குரல் எழுப்ப முடியாது. மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை முதல் அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும் போராட கூடிய ஒரு கட்சி தமிழ் முற்போக்கு கூட்டணி மாத்திரமே.

மலையகத்தின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கள் மாத்திரமே, ஆகவே எதிர்வரும் பொது தேர்தலில் எமது மூவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This