வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஊழல்; மக்கள் அதிருப்தி..!

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஊழல்; மக்கள் அதிருப்தி..!

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் பணம் கொடுத்தால் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற ஒரு நிலைமை காணப்படுவதோடு இங்கு ஊழல் நிறைந்து காணப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதில் தாம் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவித்த மக்கள் இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

தூர இடங்களில் இருந்து காலை 3 மணிக்கு வரிசையில் நின்று கடவுச்சீட்டை பெறுவதற்கு முயற்சி செய்த போதிலும் 25 பேருக்கு மாத்திரமே கடவுச்சீட்டை வழங்குவோம் என தெரிவித்து ஏனையோரை மீள செல்லுமாறு தெரிவிக்கின்றனர்.

தூர இடங்களில் இருந்து குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிழக்கு மாகாணங்களில் இருந்தும் கடவுச்சீட்டை பெறுவதற்காக வருகை தந்த தாம் இவ்வாறு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடவுச்சீட்டு அலுவலகத்தில் பணியாற்றுவோர் தமக்குத் தெரிந்தவர்களை உள்ளே அழைத்து அவர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குகின்ற செயற்பாடும் இடம்பெறுவதோடு பணம் கொடுத்தால் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் என்கின்ற ஒரு நிலைமையும் காணப்படுகின்றது.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பதவியேற்ற ஜனாதிபதி இது தொடர்பில் கவனம் செலுத்தி வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் இடம்பெறும் ஊழலை நிறுத்த வேண்டும் என்பதோடு மக்கள் இலகுவாக கடவுச்சீட்டைப் பெறுவதற்கு வழி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

CATEGORIES
Share This