அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை; நீதிமன்றத்தின் முன்னால் ரணில் நிறுத்தப்படுவார்

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை; நீதிமன்றத்தின் முன்னால் ரணில் நிறுத்தப்படுவார்

மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டு வழக்குகளுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நீதிமன்றத்தின் முன் நிறுத்த தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெளிநாட்டில் மறைந்திருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்புடைய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தொடர்பிலும், அது தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் தொடர்பிலும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை கூறினார்.

அதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் ஏற்கனவே அது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய சட்டப்படியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக கடந்த கால விசேட ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள், பாராளுமன்ற விசேட குழுக்கள் உள்ளிட்டவற்றின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டும் அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டும் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் சட்டப்படியான நடவடிக்கைகளை ஆரம்பிப்போம். இப்போது நாங்கள் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் சிலவற்றை முன்னெடுத்துள்ளோம்.

இதன்படி திருமண நடவடிக்கைகள் இப்போது முடிவடைந்திருக்கும். அவரை (அர்ஜுன மகேந்திரனை) கூடிய விரைவில் நாட்டுக்கு கொண்டு வர முடியுமாக இருக்கும். அதேபோன்று ரணில் விக்கிரமசிங்க இப்போது ஜனாதிபதியாக இல்லை. அவருக்கான விடுபாட்டு சிறப்புரிமை கிடையாது. அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு இருந்த விடுபாட்டு உரிமை அதிகாரத்தின் ஊடாகவே அவர் சட்டத்தின் முன் செல்லவில்லை. ஆனால் எங்களுக்கு அவரை நீதிமன்றத்தின் முன்னால் கொண்டுவர முடியும். அது தொடர்பான நடவடிக்கைகளை பார்ப்போம் என்றார்.

CATEGORIES
Share This