இராஜகிரிய வாகன விபத்து சம்பவம்; பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இராஜகிரிய வாகன விபத்து சம்பவம்; பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவகதவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

அப்போது, ​​வழக்கு விசாரணைகளை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளதாக வழக்குரைஞர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அமரசிறி பண்டிதரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி, இந்த வழக்கை அழைப்பதற்கு வேறு திகதியை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார். இந்த கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

CATEGORIES
Share This