21 மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த விடுதி பொறுப்பதிகாரி; மரண தண்டனையளித்த நீதிமன்றம்

21 மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த விடுதி பொறுப்பதிகாரி; மரண தண்டனையளித்த நீதிமன்றம்

இந்தியா, அருணாச்சலப் பிரதேசத்தில் 21 பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விடுதி பொறுப்பதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாடசாலையில் கல்வி பயிலும் தனது 12 வயதுடைய இரட்டைப் பிள்ளைகளை விடுதி பொறுப்பதிகாரி யும்கென் பக்ரா பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பிள்ளைகளின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ் வழக்கை விசாரணை செய்த சிறப்பு புலனாய்வுக் குழு, 2014ஆம் ஆண்டு முதல் 2022 வரையில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் மற்றும் 15 மாணவிகளை யும்கென் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

விடுதி பொறுப்பதிகாரி மாணவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து, அதனை யாரிடமும் கூறிவிடக் கூடாது என மிரட்டி, அதன் பிறகு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இவரால் பாதிக்கப்பட்ட 6 மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்திலேயே விடுதி பொறுப்பதிகாரியின் செயல்கள் குறித்து தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஆனால், பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என்று மாணவர்களை அமைதியாக இருக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணையின் பின்னர் விடுதி பொறுப்பதிகாரிக்கு மரண தண்டனையும் அவருக்கு உதவியாக இருந்த முன்னாள் தலைமை ஆசிரியர் சிங்துங் யோர்பென் மற்றும் ஹிந்தி ஆசிரியர் மார்போம் நகோம்டிர் ஆகியோருக்கு 20 வருடங்கள் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This