இஸ்ரேலின் இலத்திரனியல் போர்… பெய்ரூட்டில் வெடித்து சிதறிய பேஜர்கள்!… ஹிஸ்புல்லாவை குறிவைத்த இஸ்ரேல்!!…

இஸ்ரேலின் இலத்திரனியல் போர்… பெய்ரூட்டில் வெடித்து சிதறிய பேஜர்கள்!… ஹிஸ்புல்லாவை குறிவைத்த இஸ்ரேல்!!…

ஐங்கரன் விக்கினேஸ்வரா

(இஸ்ரேல் இலத்திரனியல் போர் முறையை நீண்டகாலமாக கொண்டிருந்தாலும், தான் ஈடுபட்டதாகக் கூறப்படும் படுகொலைகளை ஒருபோதும் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முயலாது)

மத்திய கிழக்கு மோதல்களில் ஒரு புதிய அத்தியாயத்தை இஸ்ரேலின் இலத்திரனியல் போர் திறந்துள்ளன. பேஜர் ( Pager) சாதனங்கள் பயனருக்கான குறுகிய உரைச் செய்தியைக் காண்பிக்கும், மைய ஆபரேட்டர் மூலம் தொலைபேசி மூலம் அனுப்பப்படும் முறையாகும்.
மொபைல் போன்களைப் போலல்லாமல், பேஜர்கள் ரேடியோ அலைகளில் வேலை செய்கிறது. ஆபரேட்டர் ரேடியோ அலைவரிசை மூலம் செய்தியை அனுப்புகிறது.

பேஜர்களில் பயன்படுத்தப்படும் அடிப்படைத் தொழில்நுட்பம் அதன் இயற்பியல் வன்பொருளை (Hardware) நம்பியிருப்பதால், அவை கண்காணிப்பது கடினமானது.

நேற்றய தாக்குதலால் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் மருத்துவர்கள் உட்பட 3,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் தொடர்பு கொள்ள பயன்படுத்தும் பேஜர்கள் லெபனான் முழுவதும் வெடித்தன.

பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்த தகவல்படி பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நிழல் உளவுத்துறை ஷின் பெட்:

கடந்த காலங்களில் இஸ்ரேல் இந்த இலத்திரனியல் போர் முறையைப் பயன்படுத்தி உள்ளது. குறிப்பாக ஹமாஸின் தலைமை வெடிகுண்டு தயாரிப்பாளரான யஹ்யா அய்யாஷை 1996 இல் கொன்றதும் இவ்வகையிலேயே.

இஸ்ரேலின் ஷின் பெட் நிழல் உளவுத்துறை, அய்யாஷின் தொலைபேசியில் 15 கிராம் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளை அடைத்து, அவர் தனது தந்தையுடன் பேசிய வேளை கொல்லப்பட்டார்.

இஸ்ரேல் இத்தகைய போர் முறையை நீண்டகாலக் கொள்கையைக் கொண்டிருந்தாலும், தான் ஈடுபட்டதாகக் கூறப்படும் படுகொலைகளை ஒருபோதும் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முயலாது.

தற்போதய தாக்குதல்களை ஹிஸ்புல்லா – லெபனான் அரசாங்கம் இஸ்ரேலை நோக்கி விரலை நீட்டிய போதிலும், இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. அத்துடன் இதுவரை இஸ்ரேல் இன்னமும் கருத்து தெரிவிக்கவில்லை.

பேஜர்களின் லித்தியம் பேட்டரி வெடிப்பு:

பேஜர்கள் தொலைநிலை அணுகல் மூலம் லித்தியம் அயன் பேட்டரிகள் அதிக வெப்பமடைந்து வெடிப்பதற்கு காரணமாக அமைந்ததுள்ளது.
லித்தியம்-அயன் பேட்டரிகளை பொதுவாக நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸில் முறையில் பயன்படுத்தப்படுகின்றன. அவை அதிக வெப்பமடைந்து, தீ பிடிப்பதுடன் சில சந்தர்ப்பங்களில் வெடிக்கலாம்.

இது தெர்மல் ரன்அவே எனப்படும் ஒரு நிகழ்வின் காரணமாகும். பேட்டரி வேகமான வெப்பநிலை மாற்றத்தை அனுபவிக்கும் போது ஏற்படும் ஒரு இரசாயன சங்கிலி எதிர்வினையாகும். இது பேட்டரி அதிக வெப்பமடையும் போது, அல்லது சார்ஜ் செய்யப்படும்போது இவ்வாறு தூண்டப்படுகிறது.

இந்த இரசாயன எதிர்வினையின் போது அது சக்தியின் திடீர் வெளியீட்டிற்கு வழிவகுக்கும். இதனால் இச்சாதனங்கள் தீவிர சக்தி மற்றும் வெப்பத்துடன் வெடிக்கும்.

இஸ்ரேல் இந்த சாதனங்களை ஹேக் செய்து, பேட்டரியை ரிமோட் மூலம் அதிக சார்ஜ் செய்து, வெப்ப அலையோ தூண்டியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

பேஜர்கள் பெரும்பாலும் மறைகுறியாக்கப்படாத தகவல்தொடர்பு சேனல்கள் மற்றும் காலாவதியான மென்பொருளைப் பயன்படுத்துகின்றனர். இதனால் அவை தாக்குதலுக்கு மிகவும் எளிதான இலக்குகளாக அமைகின்றன.

ஒன்-வே பேஜர்கள் செயலற்ற பெறுநர்களை கண்காணிக்க முடியாது. ஆனால் ஒரு செய்தி அனுப்பப்படும் போது அது அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு பேஜர் டிரான்ஸ்மிட்டரையும் செயல்படுத்துகிறது.

அத்முடன் ஒளிபரப்பு சிக்னலைக் கடத்துவதன் மூலம், ஒரே நேரத்தில் நெட்வொர்க்கில் உள்ள ஒவ்வொரு பேஜரையும் தொற்றியிருக்கலாம். இந்த தீம்பொருள் தொலைவிலிருந்து தூண்டப்பட்டிருக்கலாம் அல்லது முன் திட்டமிடப்பட்ட டைமரில் செயல்படுத்தப்பட்டிருக்கலாம்.

இந்த சமிக்ஞை வெடிப்புக்கான தூண்டுதலாக இருந்திருக்கலாம் அல்லது வெடிக்கும் போது சாதனங்களை வைத்திருப்பதை உறுதிப்படுத்த இது பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

இந்த பேஜர் வெடிப்புகள் ஒரு சைபர் தாக்குதலின் விளைவாக இருந்தால், இது சைபர் வார்ஃபேரின் ஒரு விதிவிலக்கான அரிதான நிகழ்வாகும், இதனால் உடல் உள்கட்டமைப்புக்கு இடையூறு ஏற்படுகிறது.

பெரிய பாதுகாப்பு மீறல்:

ஹிஸ்புல்லா அதிகாரி ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில், பேஜர்களை வெடிக்கச் செய்தது, இஸ்ரேலுடனான கிட்டத்தட்ட ஒரு வருட போரில் “பெரிய பாதுகாப்பு மீறல்” என்று கூறினார்.

கடந்த அக்டோபரில் காசா போர் வெடித்ததில் இருந்து இஸ்ரேலும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவும் எல்லை தாண்டிய போரில் ஈடுபட்டு வருகின்றன. இது பல ஆண்டுகளில் மிக மோசமான விரிவாக்கம் ஆகும்.

லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து பேஜர்களை ஒரே நேரத்தில் வெடிக்க வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் 1000க்கும் மேற்பட்ட பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின.

ஹிஸ்புல்லாவை குறிவைத்த இஸ்ரேல்:

இஸ்ரேலுக்கு எதிராக லெபனான் நாட்டில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களை குறி வைத்து பேஜர்களை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதால் சர்வதேசம் எங்கும் பரபரப்பு எழுந்திருக்கிறது.

லெபனான் நாட்டில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வரும் நிலையில் அவர்களது செல்போன்கள் உள்ளிட்டவை ஒட்டு கேட்பதால்,
அவர்கள் தங்கள் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

மொபைல் போன் பயன்படுத்தும் போது இஸ்ரேல் உளவு பார்க்கலாம் என்பதன் காரணமாகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது
பேஜர்களை வைத்தே தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

அடுத்தடுத்து பேஜர் வெடிப்பு:

பெய்ரூட் நேரப்படி மூன்று முப்பது மணி அளவில் அடுத்தடுத்து பேஜர் வெடிப்புகள் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் தொடர்ந்து வெடித்துச் சிதறின. லெபனான் மட்டுமல்லாது அந்நாட்டுக்கு வெளியேயும் பேஜர் வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் முதல் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலுடன் மோதல் போக்கை கையாண்டு வரும் நிலையில் வெடிப்பு சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு விதி மீறல் என குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

ஒரு மணி நேர குண்டுவெடிப்பு அலை:

ஹிஸ்புல்லாவின் கோட்டையான தலைநகர் பெய்ரூட்டிலும், லெபனானின் தெற்கிலும் பேஜர் சாதனங்கள் வெடித்ததாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. பேஜர் சாதனங்கள் எவ்வாறு வெடித்தன என்பது உடனடியாகத் தெரியவில்லை.

ஈரான் தூதுவர் காயம் :

மேலும் இந்த பேஜர் வெடிப்பில் ஈரான் தூதர் முஜிதாபா அமானி என்பவர் காயமடைந்ததாகவும், லெபனான் நாடாளுமன்றத்தின் ஹிஸ்புல்லா பிரதிநிதியான அலி அமாவின் மகன் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சைபர் தாக்குதல் காரணமாக பேஜர்களின் லித்தியம் அயன் பேட்டரிகள் அதிக வெப்பமடைந்து வெடித்து சிதறியாக கூறப்படுகிறது. ஹிஸ்புல்லா இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ள நிலையில், இஸ்ரேல் இது தொடர்பாக எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா தனது அமைப்பின் உறுப்பினர்களை முக்கியமான தகவல்தொடர்புகளுக்கு பேஜர்களைப் பயன்படுத்துவதைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினார். நவீன ஸ்மார்ட்போன்கள் இஸ்ரேலிய படைகளின் சைபர் தாக்குதல்களுக்கு மிகவும் எளிதில் வசப்படும் என்று நியாயப்படுத்தினார்.

CATEGORIES
Share This