தேர்தல் அன்று கேஸ் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது?: ஊடகவியலாளரின் கேள்விக்கு முன்னாள் ஆணையாளரின் சுவாரஸ்ய பதில்

தேர்தல் அன்று கேஸ் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது?: ஊடகவியலாளரின் கேள்விக்கு முன்னாள் ஆணையாளரின் சுவாரஸ்ய பதில்

தேர்தல் பிரசாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வீட்டில் எரிவாயு தீர்ந்து போனால், சிலிண்டரை எடுத்துச் செல்வதில் பிரச்சினை இருக்காது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் தினத்தன்று தனிநபர் ஒருவர் சின்னத்தைக் காட்டி வீதியில் நடமாட முடியும் என்றாலும், ஊர்வலமாகச் செல்வதைத் தடைசெய்யும் திறன் பொலிஸாருக்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாராவது ஒருவர் துவிச்சக்கரவண்டியில் எரிவாயு சிலிண்டர்களை கட்டிக்கொண்டு செல்வாலோ அல்லது நட்சத்திரம் அல்லது திசைகாட்டியை வீதியில் காண்பித்தாலோ அது தேர்தல் சட்டத்தை மீறும் செயலா? என ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் தேர்தல் நடத்தப்படாத சூழ்நிலை போன்று முற்றாக அமைதியாக இருப்பதாகவும், அமைதியான நீர்த்தேக்கத்தின் ஆழம் அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய மாகாணங்களில் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என அவர் கூறினார். வீடு வீடாக அதிக அளவில் மக்கள் செல்வது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் முதல் முடிவுகளை இரவு 11 மணியளவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

எனினும் தேர்தல் தினத்தன்றும் மக்கள் தமது தேவைக்காக சிலிண்டரை கொண்டு செல்லும் போது, அதுவும் ஒருவித பிரச்சாரமாக மாறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This