ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பலத்த பாதுகாப்பு; கொழும்பில் முக்கிய இடங்களில் குவிக்கப்படும் பொலிஸார்

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பலத்த பாதுகாப்பு; கொழும்பில் முக்கிய இடங்களில் குவிக்கப்படும் பொலிஸார்

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் நிலைநிறுத்தப்படவுள்ளனர்.

அதே வேளையில், செப்டம்பர் 21ஆம் திகதி தேர்தல் நாளுக்குப் பிறகு பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டியிருந்தால், முப்படை வீரர்களும் தயார் நிலையில் இருப்பார்கள் என்று மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய காலம் முழுவதும், பாதுகாப்பு முதன்மையாக பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை (STF) மூலம் நிர்வகிக்கப்படும்.

எனினும், தேவைப்பட்டால் உதவ ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருக்கும் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இராணுவப் படைகள் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்துமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி அனைத்து பாதுகாப்புப் படைத் தளபதிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

முன்னதாக, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆயத்தமாக, தேர்தல் நடவடிக்கைகளை சுமூகமாக நடத்துவதற்காக 54,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்குச் சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களை நிர்வகித்தல், வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படுவதைக் கண்காணிப்பது, ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதைத் தீர்ப்பது, அசம்பாவிதங்கள் இன்றி தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்வது போன்ற பணிகளுக்காக நாடு முழுவதும் பொலிஸார் நிறுத்தப்படுவார்கள்.

செப்டெம்பர் 21 ஆம் திகதி வாக்களிப்பு முடிவடைந்த பின்னர், முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வாக்களிப்பு நிலையங்களிலோ அல்லது வாக்கு எண்ணும் நிலையங்களிலோ குழுக்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும், கொழும்பு நகரின் பல முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This