சமஷ்டியை அங்கீகரிக்குமாறு தெற்கின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வலியுறுத்த ஒன்று திரள்வோம்

சமஷ்டியை அங்கீகரிக்குமாறு தெற்கின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வலியுறுத்த ஒன்று திரள்வோம்

சமஷ்டியை அங்கீகரிக்குமாறு தெற்கின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வலியுறுத்தவும் சர்வதேச காணாமலாக்கப்பட்டோருக்கான தினத்தில் ஒன்று திரள்வோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வியாழக்கிழமை (29) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் நிலவிய தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு யுத்த காலப்பகுதியில் இலங்கை அரச படைகளால் புரியப்பட்ட மனிதகுலம் ஏற்காத யுத்த குற்றங்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு பேரினவாத கருத்தியல் கொண்ட எந்தவொரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் துணிய மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.

ஆயுத யுத்தும் மௌனிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 15 வருட காலமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தமது அன்புக்குரியவர்களை தேடி கிடைக்காத நிலையில் 2,500 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி அதாவது நாளை சர்வதேச காணாமலாக்கப்பட்டோருக்கான தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்துவதற்கு ஆயத்தங்களை செய்துள்ளனர்.

இப் போராட்டத்திற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தமது முழுமையான ஆதரவை தெரிவிப்பதோடு வடகிழக்கு வாழ் அனைவரும் அப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றது.

தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நிற்கும் பிரதான வேட்பாளர்களும் அவர்களின் பின்புலத்தில் இயங்கும் கட்சிகளும் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு யுத்தத்திற்கும் இனப்படுகொலைக்கும் ஆதரவு தெரிவித்தவர்களே. அத்தோடு தமது ஆதரவாளர்களை யுத்த வெற்றி கொண்டாட தூண்டியவர்களுமாவர்.

இவர்கள் இனி மேலும் தமிழர்களுக்கு யுத்தக்குற்றங்களுக்கான நீதியையோ, அரசியல் நீதியையோ பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. இவர்களின் உண்மையை கண்டறிவதற்கான வழிமுறைகள் எல்லாம் மாயமானே. அதில் தமிழர்களுக்கு இனியும் நம்பிக்கை இல்லை.

அதுமட்டுமல்ல இவர்கள் எதிர்நோக்கி இருக்கும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் அனைத்து தேர்தல்களிலும் பேரினவாத வாக்குகளையே நம்பி இருக்கின்றனர்.பேரினவாத பௌத்த துறவிகளையே கவசமாகவும் கொண்டுள்ளனர்.இவர்களை எதிர்த்து தமிழர்களுக்கு எத்தகைய நீதியையும் உறுதி செய்யப்போவதுமில்லை.

இவர்கள் வடகிழக்கில் மக்கள் சந்திப்புகளை நடத்தும் போதும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் போதும் யுத்தக்குற்றங்கள் காணாமல், ஆக்கப்பட்டோர் விடயமாக எத்தகைய கருத்துகளையும் கூறுவதும் கிடையாது. இவர்களுக்கு சாமரை வீசுகின்ற தமிழ் அரசியல்வாதிகளும் இவ் விடயம் சம்பந்தமாக பிரதான வேட்பாளர்களிடம் கேள்வி கேட்பதற்கோ பொது மேடைகளில் கருத்து கூறுவதற்கோ தயங்குவது தமிழர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் என்பது வெறுமனே தமது உறவுகளைத் தேடும் போராட்டம் மட்டுமல்ல. அது தமிழர் தேசத்தின் அரசியல் நீதிக்கான போராட்டத்தின் அடையாளமாகவும் உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுவோரில் நூற்றுக்கும் அதிகமானோர் தீர்வு கிட்டாத நிலையில் வேதனையில் மரணத்தை தழுவியுள்ளனர். இதனை சாதாரண மரணம் என நாம் கடந்து செல்ல முடியாது.நீதி நிலை நாட்டப்படாது நடத்தப்பட்ட திட்டமிட்ட மறைமுக கொலை எனவே அடையாளப்படுத்தல் வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்தும் போராட்டம் மரணிக்காது உள்ளமைக்கு போராட்ட அமைப்புக்களின் மனத்திடமே காரணம் எனலாம். அப்போராட்தினை உயிரோட்டமுள்ளதாக்க தமிழர் தேசமாக எம் பங்களிப்பை செய்து எம் குரலை சர்வதேசத்திற்கு கேட்கச் செய்வோம்.

மேலும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தினம் தினம் சிந்தும் அறிந்தும் எமது உறவுகளும் மாவீரர்களுமாக இலட்சங்களை தாண்டியோர் இரத்தம் சிந்திய நிலத்தில் நின்றும் பேரினவாத அரசுக்கும் இனப்படுகொலை சூத்திர தாரிகளுக்கும் கொடி பிடித்துக் கொண்டு திரியும் தமிழர் தேச அரசியல் நரிகளுக்கு எதிராக குரல் எழுப்பவும் ஒன்று திரள்வோம்.

இந்தியா இன்றும் எமக்கான அரசியல் தீர்வாக 13 மே திணிக்க முயல்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் யுத்தக் குற்றங்களுக்கு காணாமல் சர்வதேச விசாரணையோடு காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது அரசியல் நீதி என்பதை மையப்படுத்தி சுயநிர்ணய உரிமையை உறுதி செய்து சமஷ்டியை அங்கீகரிக்குமாறு தெற்கின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வலியுறுத்தவும் ஒன்று திரள்வோம்.

CATEGORIES
Share This