தமிழ்க் கட்சிகள்: ரணிலை ஆதரிக்கும் – டக்ளஸ் நம்பிக்கை

தமிழ்க் கட்சிகள்: ரணிலை ஆதரிக்கும் – டக்ளஸ் நம்பிக்கை

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எனது நண்பர்களான சக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அபிவிருத்தி நிதி வாங்கிய தமிழ்க் கட்சிகளின் எம்.பிக்கள் பலர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவார்களா எனக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொருளாதார ரீதியில் சரிந்து கிடந்த நாட்டை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்கின்றார்.

நாடு பொருளாதார ரீதியில் சரிந்து கிடந்த போது யாரும் நாட்டைப் பொறுப்பேற்க முன்வராத நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனி ஒருவராக நாட்டைப் பொறுப்பேற்று ஏனைய கட்சிகளுடன் இணைந்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்கின்றார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியாகியவுடனே ரணில் விக்கிரமசிங்கவுக்கே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவோம் எனக் கூறிவிட்டோம்.

தற்போது அநேகமான தமிழ், சிங்கள, முஸ்லிம் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் எனது சக நண்பர்களான தமிழ்க் கட்சிகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் என நம்புகின்றேன்.

சக தமிழ்க் கட்சிகள் மக்களுக்கான அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக பல கோடி ரூபாய்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியமை அனைவருக்கும் தெரிந்த விடயம்.

எமது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் சமதளத்தில் மக்களின் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழ்க் கட்சிகளின் நம்பிக்கையை நான் வரவேற்கின்றேன்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தமிழ் மக்களின் அரசியல், அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினையை எமது குறிக்கோளாக அன்று தொடக்கம் இன்று வரை வலியுறுத்தி வருகின்ற ஒரே கட்சி.

அதுமட்டுமல்லாது தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு 13 ஆவது திருத்தம் ஆரம்பப் புள்ளியாக அமைய வேண்டும் என வெளிப்படையாகவே கூறிய கட்சி எமது கட்சி.

துரதிஷ்டவசமாக சக தமிழ் கட்சிகள் தாயகம், தேசியம், ஒரு நாடு இரு தேசம் என்றெல்லாம் கூறி மக்களைப் பாரிய துன்பத்துக்கு உள்ளாக்கியமை வரலாறு.

அந்த வரலாற்றைக் கடந்து தற்போது தமிழ் கட்சிகளும் நாங்கள் ஏற்கனவே வலியுறுத்திய 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை முன் வைக்கின்றன.

அவர்களின் கோரிக்கை காலம் கடந்த ஞானமாக இருந்தாலும் தற்போதாவது சரியான ஒரு அரசியல் பாதைக்கு வருவதை விட்டு வரவேற்கின்றேன்.

அதேபோல் தமிழ்க் கட்சிகள் தமிழ்ப் பொது வேட்பாளர் என ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு நன்மை பயத்தாலும் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காது என்பது அதனை ஏற்படுத்தியவர்களுக்கு நன்கு தெரியும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டை வழிநடத்தக்கூடிய ஆளுமை மிக்க தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார்.

ஆகவே, அவரது செயற்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்குச் சக தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்குவார்கள் என நம்புகின்றேன்.” – என்றார்.

CATEGORIES
Share This