வாக்குச் சீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவிப்பு: அடுத்த மாதம் 08 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு

வாக்குச் சீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவிப்பு: அடுத்த மாதம் 08 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் அடுத்த மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அடுத்த மாதம் 08ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை வாக்குச் சீட்டு விநியோகம் இடம்பெறும் என அவர் தெரிவித்தார். அன்றைய தினம் வீட்டிலிருந்து அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

வீடுகளிற்குச் சென்று வாக்குச் சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும் அதன்பின்னர் வீடுகளிற்குச் சென்று வாக்குச் சீட்டு விநியோகிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் தினம் வரை சாதாரண நேரங்களில் தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி தனது கையொப்பத்தைப் பயன்படுத்துவதனூடாக உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டைப் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் 17,140,280 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர். அவர்களில் 1,148,258 பேர் புதிய வாக்காளர்களாவர்.

CATEGORIES
Share This